டாக்சி சேவையை தடை செய்துவிட்டால் பலாத்காரங்கள் குறைந்துவிடுமா?
டெல்லி: பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம் எதிர்ப்பு கிளம்பினாலும் அது அடங்கிவிடுவதை பார்க்க முடிகிறது. டாக்சி சேவைகளுக்கு தடை விதிப்பதா வேண்டாமா என்று பலர் விவாதித்து வருகிறார்கள். 2009ம் ஆண்டில் இருந்து இதுவரை 69 ஆயிரம் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 16 ஆயிரம் வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது. மீதமுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மீடியா
பலாத்காரங்கள் பற்றி மீடியாக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் நீதிமன்றங்கள் தங்கள் வேலையை செய்ய அவை விட வேண்டும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பல முறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் முன்பே குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவாளியே என்று மீடியா தெரிவித்துவிடுகிறது. இதனால் குற்றம்சாட்டப்பட்டவர் மீடியாவை காட்டியே ஜாமீனில் வெளியே வர அல்லது குற்றத்தில் இருந்து தப்பிக்க பார்க்கிறார்.
மீடியாக்கள் குற்றச்சம்பவங்கள் நடந்த இடங்களுக்கு சென்று சாட்சிகளை பேட்டி கண்டு அதையே திரும்பத் திரும்ப டிவிக்களில் ஒளிபரப்புகிறது. இதன் மூலம் சாட்சியங்கள் நீதிமன்றத்தில் தடுமாற குற்றாவளி தப்பித்துவிடுகிறார்.

பொய் வழக்குகள்
பல நேரம் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலையாக காரணம் வழக்குகள் பொய்யானது என்பதால் தான். பழிவாங்க சில பெண்கள் பொய்யான வழக்குகள் தொடர்கிறார்கள். இது போன்று பல பெண்கள் பொய்யான வழக்குகள் தொடர்ந்துள்ளதாக முன்னாள் கர்நாடக அரசு வழக்கறிஞர் ஒன்இந்தியாவிடம் தெரிவித்தார்.

அழுத்தம்
பல விவகாரங்களில் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பலாத்கார சம்பவங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மீடியாக்கள் அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுக்க அவர்கள் போலீசாருக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். அதனால் போலீசார் அவசரமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்கிறார்கள். விளைவு போதிய ஆதாரங்கள் இல்லாமல் குற்றவாளி விடுதலை ஆகிறார்.
மீடியா அழுத்தம் கொடுத்தாலும் சில பெரிய இடத்து வழக்குகளில் போலீசார் அடங்கிவிடுகிறார்கள்.

தடை விதிக்கலாமா?
ஒழுங்கான விதிமுறைகளால் தான் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். டிரைவரின் பின்னணி பற்றி விசாரிக்காமல் அவரை பணியமர்த்தியது பற்றி உபேரிடம் விசாரணை நடத்த வேண்டும். உபேர் நிறுவனம் மீதுள்ள நம்பிக்கையில் மக்கள் டிரைவரை அழைக்கிறார்கள். அதனால் பலாத்கார சம்பவத்திற்கு அந்நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும்.
உபேர் நிறுவனத்திற்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது. ஆனால் இதனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பெங்களூரில் பிபிஓவில் வேலை பார்த்த பெண் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்ட வழக்கை எடுத்துக் கொள்வோம். அவர் பயணம் செய்த டாக்சி எஸ்ஆர்எஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது. கர்நாடக அரசு அந்நிறுவனத்திற்கு தடை விதிக்கவில்லை மாறாக விதிமுறைகளை கடுமையாக்கியது. கார்பரேட் டாக்சிகளில் எந்த பெண் ஊழியரும் தனியாக பயணம் செய்யக் கூடாது என்பது தான் முக்கிய விதிமுறையாகும்.

பலாத்காரம்
நம் நாட்டில் தினமும் 93 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. மேலும் 2012ம் ஆண்டில் 24, 923 ஆக இருந்த பலாத்கார வழக்குகளின் எண்ணிக்கை 2013ல் 33 ஆயிரத்து 707 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் 2012ல் 580 பலாத்கார வழக்குள் பதிவாகின. இந்த எண்ணிக்கை 2013ம் ஆண்டில் 1, 441 ஆக அதிகரித்தது.












Click it and Unblock the Notifications