ஜடேஜா திருமணத்தில் சர்ச்சை.. வானை நோக்கி சுட்ட உறவினர்கள்.. வார்னிங் கொடுத்த போலீஸ்!
ராஜ்கோட்: கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடோஜா ரீவா சோலான்கி திருமணம் ராஜ்கோட்டில் எளிமையான முறையில் நடைபெற்றது.
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு என்ஜினியரான ரீவா சோலான்கி என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து நிச்சயிக்கப்பட்டபடி திருமணம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் எளிமையான முறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாப்பிள்ளை ஊர்வலத்தின்போது ஜடேஜாவின் உறவினர்கள் மகிழ்ச்சியை தெரிவிக்க துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டனர். துப்பாக்கி சுடும் சப்தம் கேட்டதும் என்னவோ, ஏதோ என ஒருவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து திருமண வீட்டிற்கு வந்த போலீசார் உரிமம் உள்ள துப்பாக்கியாக இருந்தாலும் தற்காப்புக்காக சுடலாமே தவிர இவ்வாறு கொண்டாட்டத்திற்காக சுடக் கூடாது என்று எச்சரித்துள்ளனர். திருமணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கிறோம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்
ஜடேஜாவின் சகோதரிகளான நைனிபா, பத்மினிபா மற்றும் உறவினர்கள் தான் துப்பாக்கிசுடும் ஐடியா கொடுத்தவர்களாம்.