"பாகிஸ்தான் ஒரு நரகம்! அங்கு போவதற்கு இந்தியாவில் உயிரை விடுவதே மேல்!" எல்லையில் தவிக்கும் அகதிகள்
டெல்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், அந்நாட்டைச் சேர்ந்த அகதிகள் சிலர் பாகிஸ்தான் என்ற நரகத்திற்குச் செல்வதற்குப் பதிலாக இந்தியாவில் உயிரை விடுவதே மேல் எனக் கூறியுள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த வாரம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அங்கு இயற்கை அழகை ரசிக்க வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தச் சம்பவத்தில் சுமார் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இந்தியா நடவடிக்கை
காஷ்மீர் பகுதியில் சமீப காலங்களில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவியிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கதறும் அகதிகள்
குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிராக உண்மையான நடவடிக்கை எடுக்கும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. மேலும், இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் நாடு திரும்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவில் வசித்து வந்த பாகிஸ்தான் அகதிகளும் நாடு திரும்பி வருகிறார்கள். இருப்பினும், அதில் பெரும்பாலானோர் அச்சத்திலேயே இருக்கிறார்கள். குறிப்பாக பாகிஸ்தான் இந்து அகதிகள் பயந்து போய் இருக்கிறார்கள். பாகிஸ்தானில் தாங்கள் எப்படி நடத்தப்படுவோம் என்ற அச்சம் அவர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது.

பாகிஸ்தான் போவதற்கு உயிரை விடுவது மேல்
மத்திய அரசின் உத்தரவு நீண்ட கால விசா மூலம் இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த இந்துக்களைப் பாதிக்காது. அதேநேரம் குறுகிய கால விசா வைத்திருப்பவர்கள் நாடு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இருப்பினும், பல இந்து அகதிகள் பாகிஸ்தானுக்குத் திரும்ப வேண்டியிருந்தால் தங்கள் உயிருக்குப் பயப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே மதத் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டே இந்தியா வந்திருந்தனர்.. இந்தச் சூழலில் மீண்டும் அங்குத் திரும்புவது தங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என அஞ்சுகிறார்கள்
இதுபோல மத துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட பல பாகிஸ்தான் அகதிகள் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள அகதிகள் காலனியில் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் வாகா- அட்டாரி எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் ஆவர்.. இந்த முல்சாகர் கிராமத்தில் பாகிஸ்தானிலிருந்து குறுகிய கால விசாக்களில் இந்தியாவிற்கு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்து அகதிகள் வசிக்கிறார்கள். இருப்பினும், இவர்களும் இப்போது நாடு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் அகதி
அப்படி அங்கு இருப்பவர் தான் கேத்தோ ராம். இவர் பாகிஸ்தானின் சிந்து பகுதியில் வசித்து வந்தார். அங்கு மத துன்புறுத்தல் அதிகரித்ததால் தனது வீடு உட்பட அனைத்துச் சொத்துகளையும் விற்றுவிட்டு இந்தியா வந்தனர். அதுவும் பஹல்காம் தாக்குதல் நடக்கச் சில மணி நேரத்திற்கு முன்பு தான் அவர்கள் இந்தியா வந்திருந்தனர். ஆனால், அவர்களும் இப்போது நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக ராம் கூறுகையில், "பஹல்காம் தாக்குதலை ஏற்கவே முடியாது. அதைக் கண்டிக்கிறோம். இந்தத் தாக்குதலால் எங்கள் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் போன்ற ஒரு நரகத்திற்குச் செல்ல வேண்டுமா என்பதை யோசித்தாலே பயமாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை பாகிஸ்தான் போன்ற நரகத்தில் வாழ்வதற்கு இந்தியாவில் இறப்பதே மேல்..!
எங்கள் நிலைமையை கருத்தில் கொண்டு இந்தியாவில் இருக்க அனுமதிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கிறேன். அங்கு இருந்த எல்லா சொத்தையும் விற்றுவிட்டு இந்தியா வந்துள்ளோம். நீங்கள் தான் உதவ வேண்டும்" என்றார்.
அச்சத்தில் அகதிகள்
அதே சிந்து பகுதியில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த மற்றொரு நபர் பலாம்.. இவருக்கும் சரி இவரது குடும்பத்தினருக்கும் சரி பாகிஸ்தான் செல்வதில் துளியும் விருப்பமில்லை. அங்கு மீண்டும் செல்வதற்கு மரணமே மேல் என்கிறார்கள். இவர்கள் மட்டுமின்றி பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து அகதிகள் பலரும் நாடு திரும்ப அஞ்சுகிறார்கள். மத துன்புறுத்தல் அங்கு மோசமாக இருப்பதாகப் பயப்படுகிறார்கள்.
பாகிஸ்தானில் மத சிறுபான்மையினரின் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகச் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தானை "கவலைக்குரிய நாடுகள்" பட்டியலில் அமெரிக்க அரசு சேர்க்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பஹல்காம் தாக்குதல்
இதற்கிடையே பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பல முக்கிய தகவல்கள் வெளியாகி வருகிறது. அதாவது தாக்குதல் நடந்த பைசரன் பள்ளத்தாக்கு பகுதிக்கு வாகனம் மூலம் செல்ல முடியாது. நடந்தோ அல்லது குதிரை மூலமாக மட்டுமே செல்ல முடியும். அந்தப் பயங்கரவாதிகள் கோகர்நாக் காடுகளிலிருந்து சுமார் 20 முதல் 22 மணி நேரம் வரை மலைப் பகுதிகளில் நடந்து வந்து தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. தாக்குதலில் 4 முதல் 5 தீவிரவாதிகள் ஈடுபட்டு இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தீவிரவாதிகளுடன் உள்ளூரைச் சேர்ந்த அடில் தோகர் என்பவனும் இந்தத் தாக்குதலை நடத்த உதவியுள்ளான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூளைச்சலவை செய்து அடிலை தீவிரவாதியாக மாற்றியுள்ளனர். அதன் பிறகு 2018இல் ஹிஸ்புல் முஜாஹிதீனில் இணைந்த அடில், பாகிஸ்தான் சென்று பயிற்சி பெற்றுள்ளான். அதன் பிறகு 2024ல் இந்தியா திரும்பிய அவன், தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு உதவி வந்ததாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து வரும் தீவிரவாதிகளுக்குத் தங்குமிடம் மற்றும் பணம் கொடுத்து இவன் உதவியுள்ளான்.
பாதுகாப்புப் படை
பாகிஸ்தான் எல்லைக்கு அருகே அமைந்துள்ள பைசரன் பள்ளத்தாக்கில் ஏன் பாதுகாப்புப் படை இல்லை என்பதும் பிரதானக் கேள்வியாக எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ளன.. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ராகுல் காந்தி இந்தக் கேள்வியை எழுப்பினார். அமர்நாத் யாத்திரைக்காக ஜூன் மாதம் தான் இந்த வழித்தடம் திறக்கப்படும் நிலையில், அப்போது தான் பாதுகாப்புப் படை இங்குக் களமிறக்கப்படும் என்று மத்திய அரசு விளக்கமளித்தது. உள்ளூர் நிர்வாகத்திற்குத் தெரிவிக்காமலேயே சுற்றுலா நிறுவனங்கள் இங்குச் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்துள்ளன.. இதனாலேயே அங்குப் பாதுகாப்புப் படை களமிறக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications