வென்றாலும் பாஜகவிடம் எச்சரிக்கையாகவே இருக்கும் மாநில கட்சிகள்..
டெல்லி: மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றிருப்பது அதன் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஊக்கம் கொடுக்கக் கூடியதுதான்.ஆனாலும் பாஜகவுடன் கூட்டணி சேர தொடர்ந்தும் மாநில கட்சிகள் தயக்கம் காட்டியே வருவது அக்கட்சியை அதிர வைத்திருக்கிறது.
லோக்சபா தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிதான் என்று அறிவித்து 5 மாநில தேர்தலையும் பாஜக எதிர்கொண்டது. இதில் 3 மாநிலத்தில் வெற்றி பெற்றது. டெல்லியில் கூடுதல் இடங்களைப் பெற்றாலும் ஆட்சி அமைக்க இயலவில்லை.
இருப்பினும் நரேந்திர மோடியின் தீவிரமான பிரசாரத்துக்கு கிடைத்த கைமேல் பலன் என்று புளகாங்கிதத்தில் இருக்கிறது மோடி ஆதரவு வட்டாரம். அதே நேரத்தில் இப்படி ஒருவெற்றி கிடைத்தும் கூட இதுவரை எந்த ஒரு மாநில அரசியல் கட்சியும் பாஜகவுக்கு நட்புக் கரம் நீட்ட தயாராகவும் இல்லை என்பது அக்கட்சிக்கு அதிர்ச்சியாகவும் இருக்கிறதாம்.

அதிமுக, பிஜூ ஜனதா தளம்
பாஜகவைப் பொறுத்தவரை முந்தைய கூட்டணி கட்சிகளான அதிமுக, பிஜூ ஜனதா தளம் எப்படியும் திரும்பவும் தம்முடன் இணையும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால் 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்த பின்னரும் கூட ஒரு சிக்னல் கூட இந்த கட்சிகளிடத்தில் இன்னமும் வரவில்லையே என்ற கவலையில் ஆழ்ந்திருக்கிறது பாஜக

தெலுங்குதேசம்.
5 மாநில தேர்தலுக்கு முன்பே மோடியுடன் கை கோர்த்த தெலுங்குதேசம் கட்சி இப்போது கையை பிசைந்து கொண்டிருக்கிறது. காரணம் தெலுங்கானா விவகாரம்தான்.. தெலுங்கானாவை தீவிரமாக ஆதரிக்கிறது பாஜக. ஆனால் தெலுங்குதேசமோ கடுமையாக தெலுங்கானாவை எதிர்க்கிறது. இதுவே இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான நெருக்கத்துக்கு அகழியாகவும் இருக்கிறது.

எதியூரப்பா
கர்நாடகாவைப் பொறுத்தவரையில் எதியூரப்பாவை எப்படியும் மீண்டும் பாஜகவில் இணைத்துவிடுவது என்ற முடிவில் அக்கட்சித் தலைவர்கள் இருக்கின்றனர், இது அம்மாநிலத்தில் சாதகமான சூழலை உருவாக்கும் என்றாலும் அது நிறைவேறியபாடும் இல்லை..

திருப்பங்கள்?
இப்படி எதிர்பார்த்த கட்சிகள் வராத நிலையில் திமுக போன்ற எதிர்பாராத கட்சிகள் நிச்சயம் தங்கள் அணியில் இணையக் கூடும் என்று காத்திருக்கிறது பாஜக.












Click it and Unblock the Notifications