இலவசம் மேலும் ஒரு மாதம் தொடரும்..ஜியோ ப்ரைம் திட்டத்தில் சேர கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு!
ரிலையன்ஸ் பிரைம் ஜியோவின் கால அவகாசம் அடுத்த மாதம் வரை நீட்டிக்க வாய்ப்பிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மும்பை: ரிலையன்ஸ் ஜியோ பிரைம் திட்டத்தில் பதிவு செய்ய வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் அதற்கான இலக்கை எட்டாததால் அந்த திட்டத்தின் கால அவகாசம் அடுத்த மாதம் இறுதி வரை நீட்டிக்க வாய்ப்பிருக்கலாம் என்று தெரிகிறது.
ரிலையன்ஸ் ஜியோ கடந்த செப்டம்பர் மாதம் இலவச டேட்டா, இலவச வாய்ஸ்கால்களை அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. டிசம்பர் மாதத்துடன் முடிவடைய வேண்டிய இந்தத் திட்டம் கூடுதலாக மேலும் 3 மாதங்களுக்கு அதாவது, மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.

இலவச சேவைகள் இம்மாத இறுதியில் நிறைவு பெறவுள்ளதை தொடர்ந்து அந்நிறுவனம் கட்டண திட்டங்களை (டாரிஃப் ரேட்ஸ்) அறிவித்தது. ஜியோ பிரைம் திட்டத்திற்கு பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் ஒரு முறை கட்டணமாக ரூ.99-க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மார்ச் 31, 2018 வரை வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
அதாவது பிரைம் திட்டப்படி, மாதந்தோறும் அளவில்லா கால் பெற ரூ. 99 கட்டணமும், அளவில்லா டேட்டா சேவையை பயன்படுத்த ரூ. 303 கட்டணமும் வசூலிக்கப்படும். இந்நிலையில் இந்த திட்டத்தில் 22 லட்சத்தில் இருந்து 27 லட்சம் வரை வாடிக்கையாளர்கள் சேர்ப்பதற்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
எனினும் தற்போது காலம் அவகாசம் முடிய உள்ள நிலையில் இன்னும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 50 சதவீதம் கூட வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. எனவே ஜியோ பிரைம் திட்டம் இந்த மாத இறுதியில் முடிவடைய வாய்ப்பு இல்லை என்றும் அடுத்த மாதம் இறுதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications