இதுதாங்க 'இந்தியா'.. மத நல்லிணக்கம்.. இந்து கோவிலில் நடைபெற்ற இஸ்லாமிய திருமணம்
இமாசல பிரதேச மாநிலத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பால் நடத்தப்படும் இந்துக் கோவிலில் இஸ்லாமிய ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
சிம்லா: இமாசல பிரதேச மாநிலத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பால் நடத்தப்படும் இந்துக் கோவிலில் இஸ்லாமிய ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. மக்களிடையே மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை பரப்பும் விதமாக இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இந்து கோவிலில் இஸ்லாமிய திருமணம் நடைபெற்று இருப்பதாக எப்போதாவது கேள்வி பட்டு இருக்கிறீர்களா? மத நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் பறைசாற்றும் வகையிலான இந்த நிகழ்வு இமாசல பிரதேசத்தில் உள்ள ஷிம்லா மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ள இந்த நிகழ்வு குறித்து விவரம் வருமாறு:-

கோவிலில் இஸ்லாமிய திருமணம்
இமாசல பிரதேச மாநிலம் ஷிம்லா மாவட்டத்தில் உள்ள ராம்பூர் என்ற இடத்தில் சத்யநாராயணன் என்ற இந்துக் கோவில் உள்ளது. இந்தக் கோவிலை விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு நடத்தி வருகிறது. இந்தக் கோவிலில் அண்மையில் ஒரு திருமணம் நடைபெற்றது. வழக்கமாக இந்துக்கள் தான் திருமணம் இந்தக் கோவிலில் நடக்கும் சூழலில் முதல் முறையாக ஒரு இஸ்லாமிய திருமணம் நடைபெற்றது.

கோவிலில் ஏன் திருமணம்?
இஸ்லாமிய ஜோடிகளுக்கு நடைபெற்ற இந்த திருமணத்தில் இந்துக்கள் மற்றும் முஸ்லீம் மக்களும் கலந்து கொண்டனர். மௌலவி மற்றும் இரண்டு வழக்கறிஞர்கள் மற்றும் இரண்டு சாட்சியங்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற்றது. இந்த இஸ்லாமிய ஜோடிகளின் இல்லத்திற்கு அருகிலேயே வீடுகள் மசூதி இருந்த போதும் கோவிலில் திருமணத்தை நடத்த இரு வீட்டினரும் முடிவு செய்துள்ளனர்.

கோவில் அறங்காவலர் பேச்சு
கோவிலில் இஸ்லாமிய ஜோடிகளுக்கு நடந்த திருமணம் குறித்து கோவிலின் அறங்காவலர் கூறுகையில், இந்த திருமணத்திற்கு இந்து அமைப்புகளும் ஆதரவு கொடுத்தன. மணமகண் சிவில் இன்ஜினியராக இருக்கிறார். மணமகள் எம்.டெக் படித்துள்ளார். சமூகத்த்தில் மத நல்லிணகக்த்தையும் சகோதரத்துவத்தையும் பரப்பும் விதமாக இந்த திருமணம் கோவிலில் நடைபெற்றது. இந்த கோவிலை விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு நடத்தி வருகிறது. இந்த கோவில் வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகமும் அமைந்துள்ளது" என்றார்.

அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும்
மணமகளின் தந்தையான மகேந்திர சிங் மாலிக் இந்த திருமணம் குறித்து கூறுகையில், கோவிலில் நடைபெற்ற எனது மகள் திருமணத்தில் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு ஆகட்டும் இந்த நகர மக்கள் ஆகட்டும் இந்த திருமண ஏற்பாட்டில் எந்த சுணக்கமும் இன்றி நேர்மறையாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். மக்களிடையே சகோதரத்துவம் உள்ளது என்ற நல்ல செய்தியை ராம்பூர் மக்கள் பரப்பியுள்ளனர். சகோதரத்துவம் பாதிக்கப்படும் வகையில் யாரையும் தவறாக வழி நடத்தக்கூடாது" என்றார்.

மத நல்லிணக்கத்திற்கு இதுதான் சான்று
மக்களிடையே மத நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் பரப்பும் விதமாக இந்து கோவிலில் இஸ்லாமிய ஜோடிகள் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அப்பகுதியில் மட்டும் இன்றி சமூக வலைத்தளங்களிலும் இந்தியாவில் காணப்படும் மத நல்லிணக்கத்திற்கு இதுதான் சான்று என்று பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications