மண்ணில் இருந்து பறந்த தேவதை விண்ணில் கலந்த நாள்... இன்று கல்பனா சாவ்லாவின் 12வது நினைவு தினம்!
டெல்லி: விண்வெளிக்குப் பறந்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பனா சாவ்லாவின் 12வது நினைவு தினம் இன்று.
விண்வெளிக்குப் பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் கல்பனா சாவ்லா. சாதாரணப் பள்ளியில் படித்து பலர் வியக்கும்படி விண்வெளி பொறியாளராக வாழ்ந்து காட்டிய கல்பனா சாவ்லா, கொலம்பியா ஓடத்தில் விண்வெளிக்குப் பறந்து ஆய்வுகள் மேற்கொண்டவர்.
பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்த கொலம்பியா ஓடம் எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியதில், 41வது வயதில் தன் பிரியமான நட்சத்திரங்களுடன் ஐக்கியமானார் கல்பனா.

பிறப்பு...
கடந்த 1961ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி இந்தியாவிலுள்ள ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில் பிறந்தவர் கல்பனா சாவ்லா. கல்பனாவின் பெற்றோர் பெயர் பனாரஸ் லால் சாவ்லா, சன்யோகிதா தேவி. கல்பனா உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகளும், ஒரு சகோதரனும் ஆவர்.

ஆரம்பக் கல்வி...
கர்னல் அரசு பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய கல்பனா, 1982ம் ஆண்டு சண்டிகரில் விமான ஊர்தியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதனைத் தொடந்து 1984ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளிப் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

முனைவர் பட்டம்...
பின்னர் 1986ல் பௌல்தேரில் உள்ள "கோலோரடோ பல்கலைக்கழகத்தில்" இரண்டாவது முதுகலைப் பட்டமும், பிறகு 1988ல் வெண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.

நாசாவில் வேலை...
1988 ஆம் ஆண்டு, நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் "ஒசெர்செட் மேதொட்ஸ் இன்க்யின்" துணைத்தலைவராக பணியாற்றிய கல்பனா வி/எஸ்.டி.ஓ.எல்இல் சி.எஃடி ஆராய்ச்சி செய்தார். விமானம் மற்றும் கிளைடர்களை ஓட்டக் கற்றுக்கொடுக்க தகுதிச் சான்றிதழ் பெற்றதோடு மட்டுமல்லாமல், ஓட்டவும் அனுமதி பெற்றிருந்தார்.

தேர்வு...
1995ல் நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த கல்பனா, அடுத்த இரண்டு ஆண்டுகளில் "கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ்-87இல் பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார்.

விண்வெளிப் பயணம்...
1997 ஆம் ஆண்டு விண்வெளிக்குப் பறந்த கல்பனா, அங்கு சுமார் 372 மணி நேரம் தங்கியிருந்து சாதனை புரிந்தார். இதன்மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப்பெண் என்ற பெருமையையும் அவர் படைத்தார்.

தாமதம்...
முதல் விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடிந்த கல்பனா, அடுத்த ஐந்து ஆண்டுகளில் தன்னுடைய இரண்டாவது பயணத்திற்குத் தயாரானார். பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகளால் தாமதப்பட்ட இந்தப்பயணம், 2003ம் ஆண்டு வெற்றிகரமாக தொடங்கியது.

கொலம்பியா விண்கலம்...
அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ். -107 மூலம் 2003-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி தனது பயணத்தைத் தொடங்கியது. இதில் கல்பனா உட்பட 7 பேர் பயணித்தனர்.

வெடித்துச் சிதறியது...
16 நாள் ஆய்வை முடித்து வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, பிப்ரவரி 1ம் தேதி எதிர்பாராத விதமாக பூமியை அடைய 15 நிமிடங்களே இருந்த போது, அமெரிக்காவின் டெக்ஸாஸ் வான்பரப்பில் அந்த விண்கலம் வெடித்துச் சிதறியது.

அஞ்சலி...
இதில், அந்த விண்கலத்தில் பயணம் செய்த அனைத்து விண்வெளி வீரர்களுமே உயிரிழந்தனர். கல்பனாவின் மறைவுக்கு உலகமே எழுந்து நின்று அஞ்சலி செலுத்தியது.

12வது நினைவு தினம்...
இன்றைக்கும் பலருக்கும் முன் மாதிரியாக விளங்கிக் கொண்டிருக்கும் கல்பனா சாவ்லாவின் 12வது நினைவு தினம் இன்று. சின்னச்சிறிய ஊரில் பிறந்து தனக்கு பிரியமான துறையில் சாதனைகள் புரிந்து வானில் கலந்த அந்த நிஜ தேவதையை வரலாறு பேசும்.

கல்பனா சாவ்லா விருது..
கல்பனாவின் சாதனைகளை நினைவு கூறும் வகையில், கடந்த 2011ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வீரதீர சாதனை புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது என்ற பெயரில் தமிழக அரசு விருது வழங்கி கவுரவித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications