"வியத்தகு இந்தியா" சுற்றுலா தூதர் பதவியில் இருந்து ஆமிர் கானை நீக்குக.. ஆன்லைனில் வலுக்கும் பிரசாரம்
டெல்லி: சகிப்பின்மை விவகாரத்தில் சிக்கியிருக்கும் பாலிவுட் நடிகர் ஆமிர் கானை "வியத்தகு இந்தியா" எனும் இந்திய சுற்றுலாவுக்கான தூதர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி Change.Org இணையதளம் மூலமாக தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
அரசு அல்லது நிறுவனங்களுக்கு change.org இணையதளம் மூலமாக கோரிக்கைகளை அனுப்புவதும் இணையம் மூலமான இந்த பிரசாரத்தில் இணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதும் சமூக வலைதள உலகில் முதன்மை பெற்று வருகிறது. தற்போது ஆமீர் கான் விவகாரத்திலும் Change.Org மூலமாக வலுவான பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது.

ஆமிர் கான் சொன்னது இது
இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்துவருவதால் என் மனைவி நாட்டை விட்டு வெளியேறிவிடலாமா என கேட்பதாக ஆமீர் கான் தெரிவித்த கருத்துதான் பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது. ஆமிர் கான் கருத்துக்கு ஆதரவாக, எதிர்ப்பாக கருத்து மோதல்கள் உச்சகட்டத்தை அடைந்துள்ளன.

நேற்று முதல் மனு
Change.Org இணையதளத்தில் நேற்று, இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லை என ஆமிர் கானும் அவரது குடும்பத்தினரும் கருதினால் தாராளமாக நாட்டை விட்டு வெளியேறட்டும் என்ற கருத்தை முன்வைத்து பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. இதற்கு பலமான வரவேற்பு கிடைத்தது.

2வது மனு
இந்நிலையில் இன்று கர்நாடகத்தின் தேவன்கரேவைச் சேர்ந்த ககன் என்பவர் Change.Org இணையம் மூலமாக இந்திய அரசு, பிரதமர் மோடி, பிரதமர் அலுவலகம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சகத்துக்கு ஒரு மனுவை அனுப்பியுள்ளார். அதில், இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லை எனக் கூறி இந்தியாவை அவமதித்து இருக்கிறார் ஆமிர் கான். இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லை என கருதினால் ஆமிர் கான் நாட்டைவிட்டு வெளியேறட்டும்.

தூதர் பதவியில் இருந்து நீக்குக
அவரை சுற்றுலாத் துறையின் ஒரு அங்கமான "வியத்தகு இந்தியா" என்ற பிரசாரத்துக்கான தூதர் பதவியில் இருந்து மத்திய அரசு உடனே நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை மனு ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட நிலையில் 1000க்கும் அதிகமானோர் இதற்கு ஆதரவாக இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications