"வன்முறை, துப்பாக்கி சூடு.." பரபரத்த மணிப்பூர்.. 12 இடங்களில் திங்களன்று மறுவாக்குப்பதிவு!
இம்பால்: முதற்கட்ட வாக்குப்பதிவில் மணிப்பூரில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், அங்கு 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் இந்த முறை மொத்தம் ஏழு கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மொத்தம் 102 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை லோக்சபா தேர்தல் நடைபெற்றது.

நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் நடந்த இந்தத் தேர்தல் பெரும்பாலும் அமைதியான முறையிலேயே நடந்து முடிந்தது. இருப்பினும், மணிப்பூரில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. இதனால் அங்கு வாக்குப்பதிவு சில இடங்களில் பாதிக்கப்பட்டன.
அதாவது மணிப்பூர் மாநிலத்தில் இருப்பதே இன்னர் மணிப்பூர் மற்றும் அவுட்டர் மணிப்பூர் என மொத்தம் 2 லோக்சபா தொகுதிகள் தான். இருப்பினும், மணிப்பூரில் வன்முறை தொடர்வதால் அங்கு ஏப்ரல் 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதாவது அதில் இன்னர் மணிப்பூர் முழுமையாகவும் அவுட்டர் மணிப்பூரில் சில பகுதிகளில் மட்டும் கடந்த 19இல் தேர்தல் நடந்தது.. அப்போது இன்னர் மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது.
இதற்கிடையே இன்னர் மணிப்பூர் தொகுதியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட 11 வாக்குச் சாவடிகளில் திங்கள்கிழமை (ஏப்ரல் 22) மறுவாக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த 11 வாக்குச் சாவடிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவு செல்லாது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
இன்னர் மணிப்பூர் தொகுதிக்கு உட்பட்ட32 சட்டசபை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் வன்முறையால் பாதிக்கப்பட்ட நோட்டீஸின்படி, குரை, க்ஷேத்ரிகாவ், தோங்ஜு, யூரிபோக் கோந்தௌஜம் உள்ளிட்ட ஐந்து சட்டசபை தொகுதிகளில் இருக்கும் இந்த 11 வாக்குச்சாவடிகளில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மணிப்பூரில் வெள்ளிக்கிழமை நடந்த வாக்குப்பதிவு வன்முறையால் பாதிக்கப்பட்டது. அங்கு 68 சதவீத வாக்குகள் பதிவான போதிலும் மாநிலத்தில் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு, மிரட்டல், வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சேதப்படுத்தியது உள்ளிட்ட சம்பவங்களும் அரங்கேறின. குறிப்பாக இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு பகுதிகளில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் குறைந்தது நான்கு வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சூறையாடப்பட்டன.
மணிப்பூரில் இன்னர் மணிப்பூர் தொகுதியில் உள்ள அனைத்து 32 சட்டமன்றப் பகுதிகளுக்கும் தேர்தல் நடந்த நிலையில், அவுட்டர் மணிப்பூர் தொகுதிக்கு உட்பட 15 சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் ஏப்ரல் 19இல் தேர்தல் நடந்தது. அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் மீதமுள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளின் பகுதிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தச் சூழலில் தான் 11 வாக்குச்சாவடிக்கு மட்டும் மறுதேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் இன கலவரம் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாகவே அங்கு வாக்குப்பதிவுக்குக் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மணிப்பூரில் முதற்கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் "8.82 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இன்னர் மணிப்பூரில் 72.3 சதவீத வாக்குகளும் அவுட்டர் மணிப்பூரில் 61.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் இங்கு 82 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications