வயநாடு நிலச்சரிவில் சிக்கிய வடமாநிலத் தொழிலாளர்கள் 75 பேர் மீட்பு
வயநாடு: கேரள மாநிலம், முண்டக்கை பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கிய வடமாநிலத் தொழிலாளர்கள் 75க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக கேரள மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் முகமது ரியாஸ் தெரிவித்துள்ளார். இப்பகுதியில் 8 மீட்டர் அளவில் இருந்த ஓடை இப்போது பெரிய ஆறுபோல் காட்சியளிப்பதாகவும், அங்கிருந்த குடியிருப்புவாசிகளின் நிலைமை என்ன ஆனதென்று தெரியவில்லை என்றும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் கடந்த மே மாத இறுதியில் தென் மேற்குப் பருவமழை துவங்கியது. அப்போதிருந்தே அங்கு கன மழை தொடர்ந்து கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக வயநாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கனமழை பெய்து வந்தது. தென்மேற்குப் பருவமழை துவங்கி கிட்டத்தட்ட 2 மாதத்துக்கு மேலான நிலையிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில்தான், வயநாடு மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரேநாளில் 300 மில்லி மீட்டர் அளவு மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

முண்டக்கை, மேட்டுப்பட்டி, சூரல்மலா உள்ளிட்ட மூன்று பகுதிகளில் இருந்த வீடுகள் மண்ணில் புதைந்தன. முண்டக்கை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் அசாம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர். தேயிலைத் தோட்டத்தை ஒட்டியுள்ள ஓடையின் அருகில் உள்ள வீடுகளில் 65க்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், முண்டக்கை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இந்த வீடுகள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. முண்டக்கை பகுதியை இணைக்கும் பாலம் உடைந்ததால் அப்பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது. குடியிருப்பையொட்டி வெறும் 8 மீட்டர் ஓடை இருந்த நிலையில், நிலச்சரிவுக்குப் பின்னர் இந்த ஓடை மிகப்பெரிய ஆறுபோல மாறியுள்ளது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 949790 0402, 0471 2721566 ஆகிய உதவி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, கேரள சுற்றுலாத் துறை அமைச்சர் முகமது ரியாஸ் கூறியதாவது-
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்புப் படையினர், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முண்டக்கை பகுதியில் நிலச்சரிவில் சிக்கித் தவித்த வடமாநிலத் தொழிலாளர்கள் மீட்புத் துறையினர் மூலமாக பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கயிறு மூலமாக 78 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தங்களால் இயன்ற அளவில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கி நேற்று காலை முதல் உணவின்றி, தண்ணீரின்றி பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான தண்ணீர், உணவு போன்றவையும் வழங்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications