ராகுல் காந்தியும்.. அந்த 60 நாட்களும்... ஒரு "டூர்" குறிப்பு!
டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான 60 நாட்களுக்கு எங்கு போனார், என்ன செய்தார் என்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. விவாதங்களையும் எழுப்பியது. தற்போது அது குறித்த வி்வரத்தை இந்தியா டுடே பட்டியலிட்டுள்ளது.
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் அவர் மேற்கொண்ட பயணம் குறித்து இதில் விவரம் தரப்பட்டுள்ளது.
பிப்ரவரி 16 முதல் ஏப்ரல் 16 வரையிலான கால கட்டத்தில் ராகுல் காந்தி எங்கிருந்தார் என்ன செய்தார் என்ற வி்வரம் இதில் இடம் பெற்றுள்ளது.
டெல்லியிலிருந்து
டெல்லியிலிருந்து பிப்ரவரி 16ம் தேதி ராகுல் காந்தி கிளம்பிச் சென்றார். அவரது பயணம் 56 நாட்கள் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் அவர் சரியாக 60 நாள் பயணத்தில் இருந்தார்.
தென் கிழக்கு ஆசிய நாடுகள்
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் அவர் சுற்றுப்பயணம் செய்தார். பிப்ரவரி 16ம் தேதி அவர் பாங்காக் போய்ச் சேர்ந்தார். அங்கு அவர் ஒரு நாள் தங்கியிருந்தார்.
கம்போடியாவில் 11 நாட்கள்
அடுத்து பிப்ரவரி 17ம் தேதி பாங்காக்கிலிருந்து கிளம்பி கம்போடியா சென்றார். அங்கு அவர் 11 நாட்கள் தங்கியிருந்தார்.
மீண்டும் பாங்காக்
இதைத் தொடர்ந்து பிப்ரவரி 28ம் தேதி அவர் மீண்டும் பாங்காக் திரும்பினார். ஒரு நாள் தங்கினார்.
மியான்மர்
அடுத்து அவர் மியான்மர் சென்றார். அங்கு 21 நாட்கள் தங்கியிருந்தார். மியான்மரில்தான் அவர் அதிக நாட்கள் தங்கியிருந்தார். அதாவது மார்ச் 1ம் தேதி முதல் 21ம் தேதி வரை.
மீண்டும் பாங்காக்
அடுத்து மார்ச் 22ம் தேதி அவர் மீண்டும் பாங்காக் திரும்பி அங்கு அயுத்தயா என்ற இடத்தில் உள்ள புத்த மத பாரம்பரிய மையத்திற்குச் சென்று பார்வையிட்டார். தற்போது 9 நாட்கள் அவர் தாய்லாந்தில் தங்கினார்.
வியட்நாம்
மார்ச் 31ம் தேதி வியட்நாம் கிளம்பிச் சென்றார் ராகுல் காந்தி. அங்கிருந்து ஏப்ரல் 12ம் தேதி அவர் பாங்காக் திரும்பி வந்தார்.
5 நாட்கள்
பாங்காக்கில் ஏப்ரல் 16ம் தேதி அவர் தங்கியிருந்தார். அன்றே அங்கிருந்து கிளம்பி இந்தியா வந்து சேர்ந்தார் ராகுல் காந்தி.
தாய்லாந்தில் மொத்தமாக 15 நாட்கள்
ராகுல் காந்தி தனது பயணத்தின்போது கம்போடியாவில் 11 நாட்கள், வியட்நாமில் 12 நாட்கள், தாய்லாந்தில் மொத்தமாக 15 நாட்கள் தங்கியிருந்தார். மியான்மரில் 21 நாட்கள் தங்கியிருந்தார்.
சதீஷ் சர்மாவின் மகன்
ராகுல் காந்தியின் இந்த பயணத்தின்போது அவருடன் மூத்த காங்கிரஸ் தலைவர் சதீஷ் சர்மாவின் மகன் சமீரும் உடன் பயணித்தார்.