ஓட்டுக்கு இடது... நோட்டுக்கு வலது!
இடைத்தேர்தலையொட்டி வங்கிகளில் பணம் மாற்றுபவர்களின் வலது கையில் அழியாத மை வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவர்களின் வலது கையில் மை வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒரே நபர் மீண்டும் மீண்டும் பணம் மாற்றுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு ஒரு வாரமாகியும் அவற்றை வங்கிகளில் மாற்ற முடியாததால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து வங்கிகளிலும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ஏடிஎம்களும் சரிவர இயங்காததால் அன்றாட செலவுக்கு கூட மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். நிலைமையை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்களை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பணம் மாற்றுவோர்கள் கையில் மை வைக்கப்படும் என மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்த தாஸ் இன்று அறிவித்தார். அதன்படி வலது கை ஆள்காட்டி விரலில் அழியாத மை வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நான்கு தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் வங்கிகளில் பணம் மாற்றுபவர்களின் வலது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வாக்களிப்பவர்களுக்கு இடது கையில் அழியாத மை வைக்கப்படுவது வழக்கம்.