மாநிலங்களின் ஒப்புதலுடன் நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் - உமா பாரதி உறுதி
டெல்லி: மாநிலங்களின் ஒப்புதலுடன் நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று மக்களவையில் நீர் ஆதாரத் துறை அமைச்சர் உமா பாரதி உறுதி அளித்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 18 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவையில் நேற்றைய கூட்டத்தின் போது நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக எம்.பி.க்கள் பேசினர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள எம்.பி.க்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் கேள்வி நேரத்தின் போது அமைச்சர் உமா பாரதி பேசியதாவது: நதிகள் இணைப்பு திட்டத்துக்கு தமிழ்நாடு ஆதரவு அளிக்கிறது. இத்திட்டத்தை செயல்படுத்த எப்பொழுதும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.
ஆனால், கேரளா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனவே, ஒப்புதல் அளிக்கும் மாநிலங்களுடன் மட்டும்தான் நதிகள் இணைப்பு குறித்து பேசுவோம். இதை பிரதமர் மோடியும் தெளிவாக கூறியுள்ளார். இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க எந்த மாநிலத்தையும் கட்டாயப்படுத்த மாட்டோம். தாங்களாக முன்வரும் வரை காத்திருப்போம்.
எனினும் நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவோம். இந்த திட்டம் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள திட்டமாகும். இதை பாஜக தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளோம். உச்ச நீதிமன்றம் கூட நாட்டின் நலன் கருதி நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தலாம் என்று கூறியுள்ளது.
நாட்டில் ஒரு பக்கம் வெள்ளத்தால் ஏராளான உடைமைகளையும் உயிர்களையும் இழக்கிறோம். வெள்ளத்தை சமாளிக்க மட்டும் ஆண்டுதோறும் ரூ.5000 கோடியை மத்திய அரசு செலவு செய்கிறது. இந்த பிரச்சனைக்கு நதிகள் இணைப்பு ஒன்றுதான் தீர்வாகும். சில மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்க சில மாநிலங்கள் வறட்சயால் காய்ந்து கிடக்கின்றன. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, பாஜக அரசு நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தி காட்டும். இவ்வாறு அமைச்சர் உமா பாரதி கூறினார்.












Click it and Unblock the Notifications