"கரன்சி” புரளும் நாசிக்கில் 2 ஆயிரம் கிலோ “வெங்காயம்” அபேஸ் - விலை உயர்வால் அதிகரிக்கும் கொள்ளை!
மும்பை: நாசிக்கில் 2 ஆயிரம் கிலோ வெங்காயம் திருடு போன சம்பவம் அனைவரையும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
வட மாநிலங்களில் வெங்காயம் விலை இறக்கை கட்டி பறக்கிறது. சில்லறை விலையில் கிலோ ரூபாய் 80 யை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் மராட்டிய தலைநகர் மும்பை வடாலாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வியாபாரி ஒருவரின் கடை பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் 700 கிலோ வெங்காயத்தை திருடி சென்று விட்டனர்.

இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் துப்பு துலக்க முடியாமல் திணறி வரும் நிலையில், அதே மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் வெங்காய திருட்டு சம்பவம் அரங்கேறி உள்ளது.
அந்த மாவட்டத்தில் உள்ள நந்த்காவ் தாலுகா பிம்பர்கேத் கிராமத்தை சேர்ந்த விவசாயி அபாசாகேப் பவார். இவர் தனது விவசாய நிலத்தில் விளைந்த வெங்காயத்தை குடோனில் வைத்து இருந்தார். சம்பவத்தன்று இரவு குடோனின் கதவு பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் 2 ஆயிரம் கிலோ வெங்காயத்தை திருடி சென்று விட்டனர்.
நல்ல விலைக்கு விற்க நினைத்து குடோனில் சேமித்து வைத்திருந்த வெங்காயம் திருட்டு போனதால் அதிர்ச்சி அடைந்த விவசாயி, நந்த்காவ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்காய திருட்டு ஆசாமிகளை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications