கமுக்கமாக 6 கம்பெனிகளை இழுத்து மூடிய சோனியா மருமகன் ராபர்ட் வதேரா!
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா தாம் நடத்தி வந்த 6 நிறுவனங்களை ஓசையின்றி இழுத்து மூடிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சோனியா காந்தியின் மகள் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஹரியானா,. ராஜஸ்தான் மாநிலங்களில் அதிகாரத்தை பயன்படுத்தி விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு நிலத்தை வாங்கி டி.எல்.எப். போன்ற நிறுவனங்களிடம் அதிக விலைக்கு விற்றார் என்ற குற்றச்சாட்டு வதேரா மீது பூதாகரமாக எழுந்தது.
இந்த சர்ச்சையில் சிக்கிய 6 கம்பெனிகளைத்தான் தற்போது வதோரா இழுத்து மூடியுள்ளதாக கூறப்படுகிறது. இவை அனைத்தும் பிரைவேட் லிமிடெட் என பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களாகும். அனைத்துமே வேளாண் சார் நிறுவனங்களாக பதிவு செய்யப்பட்டவையாகுமாம்.
இந்த நிறுவனங்களின் பெயரில்தான் வதேராவும் டி.எல்.எப். நிறுவனமும் ஒப்பந்தங்களையும் செய்திருந்தன. தற்போது இந்நிறுவனங்கள் அனைத்துமே ஓசையின்றி இழுத்து மூடப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.