மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால் சோனியா மருமகன் சிறைக்கு அனுப்பப் படுவார்: உமாபாரதி
ஜான்சி: மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைத்தால் ராபர்ட் வதேரா சிறைக்கு அனுப்பப்படுவது நிச்சயம் எனத் தெரிவித்துள்ளார் பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான உமாபாரதி.
காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா. இவர் மீது நில மோசடி தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அவற்றை காங்கிரஸ் அரசு மூடி மறைத்து வருவதாக கண்டனம் தெரிவித்து வருகிறது பாஜக.
இந்நிலையில் நேற்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான உமாபாரதி உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஜான்சி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. மத்தியில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தால் அவர் சிறைக்கு அனுப்பப்படுவார் என்றார்.
மேலும், உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி போலீசார் துணையுடன் தேர்தலில் வெற்றி பெற முயற்சி செய்கிறது. அவர்கள் மீண்டும் வெற்றி பெற உதவி செய்யும் போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கொடுக்கின்றனர்' என உமாபாரதி குற்றம் சாட்டிப் பேசினார்.