இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை.. இந்தியாவின் பலவீனம் இதுதானா?.. ரோகித் சர்மா கொடுத்த பதிலடி!
விசாகப்பட்டினம்: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு இடதுகை பவுலர்களிடம் திணறுவது தான் என விமர்சனங்கள் குவிந்து வரும் சூழலில் கேப்டன் ரோகித் சர்மா கோபமடைந்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி கண்ட நிலையில் 2வது போட்டியில் படு மோசமான தோல்வியை பெற்றுள்ளது.
முதலில் ஆடிய இந்திய அணி 26 ஓவர்களில் 117 ரன்களை மட்டுமே குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்துவிட்டது. இதன்பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 11 ஓவர்களில் ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் 121 ரன்களை அடித்து வெற்றி கண்டது.

2வது போட்டி
டி20 கிரிக்கெட்டை விட அதிவேகமாக போட்டி முடிந்தது கூட இந்திய ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தவில்லை. ஆனால் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களிடம் சிக்கி அனைத்து விக்கெட்டையும் இழந்தது தான் பிரச்சினையாகியுள்ளது. மிட்செல் ஸ்டார்க்கின் வேகத்தில் சிக்கி ரோகித் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், முகமது சிராஜ் என 5 முக்கியமான விக்கெட்கள் பரிதாபமாக சென்றன. இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களிடம் தொடர்ச்சியாக இந்திய வீரர்கள் தடுமாறுகின்றனரா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

ரோகித் சர்மா பதில்
இந்நிலையில் இதற்கு ரோகித் சர்மா பதில் கொடுத்துள்ளார். அதில், எதிரணியில் தரமான பவுலர்கள் இருக்கும் போது, விக்கெட்கள் எடுப்பதற்காக பலகட்ட முயற்சிகளை செய்ய தான் செய்வார்கள். இடதுகையாக இருந்தால் என்ன? வலதுகையாக இருந்தால் என்ன? அவர்கள் மொத்தத்தில் விக்கெட் எடுக்கின்றனர் அவ்வளவு தான். இடதுகை வீரர்களும் தான் விக்கெட் எடுத்தனர், ஆனால் அதைப்பற்றி யாருமே பேசவில்லை.

மீண்டும் நடக்காது
விக்கெட்களை மோசமாக இழந்திருந்தால் அது பிரச்சினை தான். தவறு என்னவென்பதை கண்டறிந்து அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறோம் என்பதை பற்றி தான் பேசவேண்டும். குறிப்பிட்ட பவுலர்களால் தடுமாற்றம் எனக்கூறுவது சரியில்லை. நாம் நினைக்கும் விஷயம் நடக்கவில்லை என்றால், நிறைய கருத்துக்கள் மனதிற்குள் ஓடிக்கொண்டே தான் இருக்கும். ஆனால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து பயிற்சி மேற்கொள்வோம், சென்னையில் இதுபோன்று நடக்காது என ரோகித் கூறியுள்ளார்.

3வது ODI போட்டி
இரு அணிகளும் மோதும் 3வது ஒருநாள் போட்டி வரும் மார்ச் 22ம் தேதியன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டி நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது என்பதால் ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்துள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தான் உலகின் நம்.1 அணியாக இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications