அம்பேத்கர் பிறந்த நாளில் புத்த மதத்தை தழுவினர் ரோகித் வெமுலாவின் தாய், சகோதரர்...
மும்பை: தற்கொலை செய்து கொண்ட ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோகித் வெமுலாவின் தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் அம்பேத்கர் பிறந்த நாளான இன்று புத்த மதத்துக்கு மாறியுள்ளனர்
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படித்து வந்த தலித் மாணவர் ரோகித் வெமுலா, கடந்த ஜனவரி மாதம் 17-ந் தேதி விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டார். பல்கலைக்கழக நிர்வாகத்தின் கெடுபிடிகள் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
இந்நிலையில் ரோகித் வெமுலாவின் தாயார் ராதிகா, சகோதரர் நாக சைதன்ய வெமுலா ஆகியோர் இன்று புத்த மதத்திற்கு மாறினர். அண்ணல் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளையொட்டி இன்று மும்பை தாதரில் நடந்த நிகழ்ச்சியில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் முன்னிலையில், ரோகித்தின் தாயார் மற்றும் சகோதரர் இருவரும் துறவிகளிடம் தீட்சை பெற்று புத்த மதத்தை ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் இருவரும் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். சாதிய முறைகளை கடுமையாக எதிர்த்து வந்த டாக்டர் அம்பேத்கர் கடந்த 1956-ம் ஆண்டு நாக்பூரில் இந்து மதத்தை விட்டு வெளியேறி புத்த மதத்தைத் தழுவினார் என்பது வரலாறு.












Click it and Unblock the Notifications