ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் புதிய ஒரு ரூபாய் நோட்டுக்கள்... வாங்குபவர்கள் ‘பதுக்குவதாக’ புகார்
டெல்லி: புதிய ஒரு ரூபாய் நோட்டுகளை ஆன்லைனில் அதிக விலை கொடுத்து வாங்குபவர்கள், அவற்றைப் புழக்கத்தில் விடாமல் பதுக்கி விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒரு ரூபாய் நோட்டு அச்சடிக்க ரூ. 1.14 காசு செலவு செய்யப்படுகிறது. எனவே, கடந்த 1994ம் ஆண்டு முதல் ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தப்பட்டு, அதற்குப் பதில் நாணயங்களை புழக்கத்தில் விடப்பட்டது. இதே போன்று, செலவுகளைக் குறைக்கும் வகையில் 2 மற்றும் 5 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு புதிதாக ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு தொடக்கத்தில் மீண்டும் அறிமுகப் படுத்தப்பட்ட இந்த ரூபாய் நோட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆன்லைனில் இவை ஒரு நோட்டு ரூ. 100 வரை விற்கப்படுகிறது.
ஆனால், இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஆன்லைனில் கூடுதல் விலை கொடுத்து இந்தப் புதிய ஒரு ரூபாய் நோட்டுகளை வாங்குபவர்கள் அவற்றைப் புழக்கத்தில் விடுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அவற்றைப் பதுக்கி வைத்து பின்னாளில் கூடுதல் விலைக்கு விற்க முயற்சிப்பார்கள் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
எனவே, இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.