காஷ்மீரை அழிக்க போறீங்களா? பாகிஸ்தானுக்கு ரூ.8,500 கோடி வழங்கும் IMF.. விளாசிய உமர் அப்துல்லா
இஸ்லாமாபாத்: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் உச்சத்தில் உள்ளது. இதற்கிடையே தான் நம் நாட்டின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு ரூ.8,500 கோடியை கடனாக வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இதனால் கடும் கோபமடைந்துள்ள ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, சர்வதேச நாணய நிதியத்தை சாடியுள்ளார். அதோடு பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் கடன் என்பது ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளுக்கு அழிக்கும் ஆயுதங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று அச்சம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான்.. தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. ஆனால் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதில் அந்த நாடு கவனம் செலுத்துவது இல்லை. மாறாக இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் சண்டையிடுவதிலும், பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதிலேயும் தான் ஆர்வமாக உள்ளது.

குறிப்பாக பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினருக்கு நிதி உதவி செய்து தங்களது தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளும் வழக்கத்தை கொண்டுள்ளது. இதனை அந்த நாட்டின் முன்னாள், இந்நாள் அமைச்சர்களே டிவி இண்டர்வியூக்களில் தெரிவித்து உள்ளனர். இப்போது நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பெரிய மோதல் என்பது உள்ளது.
நாளுக்கு நாள் இந்த மோதல் என்பது அதிகரித்துள்ளது. தற்போது ஏவுகணை தாக்குதல், ட்ரோன் தாக்குதல் நடந்து வருகிறது. இதனால் இருநாடுகள் இடையே போர் பதற்றம் என்பது அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் தனது நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக தங்களுக்கு 8,500 கோடி ரூபாய் (1 பில்லியன் அமெரிக்க டாலர்) கடன் வழங்கும்படி சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டு இருந்தது.
இதற்கான நடைமுறைகள் நடந்து வந்தபோது தான் நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் என்பது ஏற்பட்டது. இதில் பாகிஸ்தானை நம் நாடு பதம் பார்த்து வருகிறது. பாகிஸ்தானின் விமானப்படை தளங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருநாடுகள் இடையே பதற்றம் உச்சத்தில் உள்ளதால் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு கடன் வழங்க கூடாது. ஒருவேளை கடன் வழங்கினால் அது இந்தியாவுடனான மோதல் மற்றும் பயங்கரவாதத்துக்கு பயன்படுத்தப்படும் என்று இந்தியா தெரிவித்தது. சர்வதேச நாணய நிதிய கூட்டத்தில் இந்த கருத்தை இந்தியா எடுத்து வைத்தது.
ஆனால் சர்வதேச நாணய நிதியம் அதனை ஏற்கவில்லை. பாகிஸ்தானுக்கு ரூ.8,500 கோடி கடன் வழங்க சர்வசேத நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் விரைவில் பாகிஸ்தானுக்கு ரூ.8,500 கோடி கிடைக்க உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இந்த நடவடிக்கையை நம் நாடு கடுமையாக எதிர்க்கிறது. அரசியல் கட்சி தலைவர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜம்மு காஷ்மீரின் முதல்வர் உமர் அப்துல்லா சர்வதேச நாணய நிதியத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛தற்போது நிலவும் பதற்றத்தை சர்வதேச சமூகம் (சர்வதேச நாணய நிதியம்) என்ன நினைக்கிறது என்பதை என்னால் உறுதியாக நினைத்து பார்க்க முடியவில்லை. ரஜோரி, பூங்ச், உரி, டாங்தார் உள்பட பல இடங்களை அழிக்க பாகிஸ்தான் பயன்படுத்தும் அனைத்து ஆயுதங்களுக்கும் பணம் செலுத்துவது போல் ஐஎம்எஃப் வழங்கி உள்ளது. இப்படி இருந்தால் பதற்றம் எப்படி தணியும்'' என்று விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications