ஜைனர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினருக்கு சிறுபான்மை அந்தஸ்தா.. ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு
போபால்: சீக்கியர்கள், புத்த மதத்தினர் மற்றும் ஜைனர்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து தருவதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது இந்து சமுதாயத்தைப் பிரிக்கும் சூழ்ச்சி என்றும் அது கூறியுள்ளது. போபாலில் நடந்து வரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சிந்தனைக் கூட்டத்தில் இந்த எதிர்ப்புக் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் ஜைனர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள் ஆகியோரை தனிச் சமுதாயமாக கருத முடியாது. அவர்கள் இந்து சமுதாயத்தின் ஒரு அங்கம் என்று பேசியவர்கள் கூறினர்.
இந்துக்கள்தான்
கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறுகையில், ஜைனர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இந்துக்கள் அல்லாதோர் என்று கருதவில்லை அவர்களும் இந்து சமுதாயத்தின் ஒரு அங்கம்தான்.
இந்துயிசம்- மதம் அல்ல
இந்துயிசம் என்பது மதம் அல்ல. அது வாழ்க்கை நெறி. இந்துயிசத்தின் தத்துவமே தேசியம்தான். இது நமது தொன்மையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் வழி வந்தது.
பிற கலாச்சாரங்களை வெறுப்பதில்லை
இந்துயிசம், பிற கலாச்சாரங்களை வெறுப்பதில்லை, மாறாக வேறுபட்ட பாரம்பரியங்களையும் கூட அது ஏற்றுக் கொண்டு தன்னோடு அரவணைத்துக் கொண்டுள்ளது. மக்கள் இணைந்து வாழ்வும் நெறியை இந்துயிசம் போதிக்கிறது என்றார் அவர்.
தொகாடியாவின் தீப் பேச்சு
இக்கூட்டத்தில் சர்ச்சைத் தலைவர் பிரவீன் தொகாடியா பேசுகையில், பாஜக தேர்தல் அறிக்கையில், ராமர் கோவில் கட்டுவோம், 370 சட்டத்தை நீக்குவோம் என்பது உள்பட பல வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பிரதமர் மோடி மறந்து விடக் கூடாது. புதிய அரசு தான் சொன்னதை நிறைவேற்றும் என்று நான் நம்புகிறேன் என்றார்.