"பசித்த பூனைக்கு முன் பாலை வைக்கலாமா.." உத்தரகண்ட் 19 வயது பெண் கொலை.. ஆர்எஸ்எஸ் பிரமுகர் சர்ச்சை
டேராடூன்: உத்தரகண்ட் பெண் வரவேற்பாளர் கொலை தொடர்பாக ஆர்எஸ்எஸ் பிரமுகர் கூறியுள்ள கருத்துகள் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகண்ட்டில் பாஜக முன்னாள் அமைச்சராக இருந்த வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா அங்குள்ள பௌரி மாவட்டத்தில் ரிசார்ட் ஒன்றை நடத்தி வந்தார்.
இரு வாரங்களுக்கு முன்பு, அந்த ரிசார்ட்டில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்த 19 வயது இளம் பெண் திடீரென மாயமானார். இது தொடர்பாகப் போலீசில் புகார் அளித்த பெற்றோர், உருக்கமான வீடியோ ஒன்றையும் வெளியிட்டனர்.
இது தான் அதிர்ஷ்டம்.. வாங்கிய 3 லாட்டரிக்கும் பரிசு.. ஒரேநாளில் ரூ1.22 கோடிக்கு சொந்தக்காரரான தாத்தா
கொலை
அதில் தங்கள் மகள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் அதற்கு புல்கித் ஆர்யா தான் காரணம் என்றும் கூறி இருந்தனர். இந்த வீடியோ வேகமாகப் பரவிய நிலையில், போலீசார் விசாரணையைத் துரிதப்படுத்தினர். அதில் ரிசார்ட்டில் பணிபுரியும் இருவருடன் இணைந்து புல்கித் ஆர்யா தான் அங்கிதாவை கொலை செய்தது உறுதியானது. அவர்களைக் கைது செய்து போலீசார் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் போது, பொதுமக்கள் அவர்களுக்குத் தர்ம அடி கொடுத்தனர்.
காரணம்
போலீஸ் விசாரணையில் கொலைக்கான காரணமும் தெரிய வந்தது. தன்னுடனும் ரிசார்ட்டிற்கு வருவோருடனும் உடலுறவு கொள்ள வேண்டும் என்று அங்கிதாவை புல்கித் ஆர்யா மிரட்டி உள்ளார். இதற்கு அங்கிதா மறுத்து வரவே இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதில் அங்கிதாவை கடுமையாகத் தாக்கிய புல்கித் ஆர்யா, உடலை அருகில் இருந்த கால்வாயிலும் போட்டுள்ளான்.
ஆர்எஸ்எஸ் பிரமுகர்
இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து புல்கித் ஆர்யாவின் தந்தை வினோத் ஆர்யா பாஜகவில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்தச் சூழலில் இந்த கொடூர கொலை தொடர்பாக ஆர்எஸ்எஸ் பிரமுகர் விபின் கர்ன்வால் சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார். இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், அவர் மீதும் உத்தரகாண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது. சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பூனைக்கு முன்னால் பால்
விபின் கர்ன்வால் தனது பேஸ்புக் பக்கத்தில், "நான் மெழுகுவர்த்தி ஊர்வலத்துக்கோ, முழு அடைப்பிற்கோ செல்லவில்லை. 19 வயது சிறுமியின் சம்பாத்தியத்தில் தந்தையும் சகோதரனும் உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டு வந்துள்ளனர். தவறு நடைபெறுகிறது என அனைவருக்கும் தெரிந்த ரிசாட்டில் எப்படி குடும்ப பெண்ணை வேலைக்கு அனுப்ப அவர்களால் அனுமதிக்க முடிந்தது. பசித்த பூனைகளுக்கு முன்னால் பாலை வைத்த அவர்கள் தான் மிகப் பெரிய குற்றவாளிகள்" என்று பதிவிட்டு உள்ளார்.
வழக்கு
இவரது பதிவு இணையத்தில் வேகமாகப் பரவியது. பலரும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்தச் சூழலில் விபின் கர்ன்வாலுக்கு எதிராக பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இப்போது தலைமறைவாக உள்ள விபின் கர்ன்வாலை தேடி வருவதாகவும் உத்தரகண்ட் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
பகீர் தகவல்
சில நாட்களுக்கு முன்பு, அந்த ரிசார்ட் குறித்து முன்னாள் ஊழியர்கள் சில அதிர்ச்சி தகவல்களைத் தெரிவித்து உள்ளனர். அதில் ரிசாட்டில் போதைப்பொருள் பயன்பாடும், விபசாரமும் வழக்கமாகவே நடைபெறும் என்று தெரிவித்து இருந்தனர். அங்கு முன்பு பணிபுரிந்த ரிஷிதா கூறுகையில், "அங்கு மதுபானம், கஞ்சா உள்ளிட்ட எல்லா போதைப் பொருளையும் விருந்தினர்களுக்குக் கொடுப்பார்கள். அவ்வளவு ஏன் பெண்களையும் கூட விபசாரத்திற்கு வழங்குவார்கள்" என்றார்.