கேரளாவில் பள்ளிக் குழந்தைகள் முன் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினருக்கு கத்திக் குத்து
திருவனந்தபுரம்: கேரளாவில் பள்ளிக் குழந்தைகள் முன்பு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவரை 6 பேர் கொண்ட கும்பல் கத்தி, வாளால் தாக்கியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் தள்ள தலசேரியைச் சேர்ந்தவர் பிஜு(29). ஆட்டோ டிரைவரான அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர். செவ்வாய்க்கிழமை காலை அவர் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு படிக்கும் 4 குழந்தைகளை தனது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு அவர்களை பள்ளியில் விடச் சென்றார்.

அப்போது சிபிஎம் கட்சியை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரது ஆட்டோவை வழிமறித்து அவரை வெளியே இழுத்து கத்தி மற்றும் வாளால் தாக்கியுள்ளது. இதை பார்த்த குழந்தைகள் பயத்தில் அழத் துவங்கினர்.
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த பிஜு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த கும்பலை தேடி வருகிறார்கள். முன்னதாக கடந்த மாதம் கண்ணூர் மாவட்டம் பாபினெசேரியில் 27 வயது ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் அவரது வயதான பெற்றோர் கண் முன்பு குத்திக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications