உ.பி. சட்டசபைக்குள் வெடித்தது கலவரம்.. முதல் கூட்டத் தொடரிலே எதிர்க் கட்சிகள் பெரும் ரகளை !
உத்தரப் பிரதேச முதல்வராக யோகி ஆதித்யாநாத் பதவியேற்ற பிறகு நடைபெற்ற முதல் சட்டப் பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ரகளையில் ஈடுபட்டனர்.
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த பிறகு, இன்று நடைபெற்ற முதல் சட்டசபை கூட்டத் தொடரில் எதிர்க் கட்சிகள் பெரும் ரகளையில் ஈடுபட்டன.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து அம்மாநில சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ராம் நாயக்கின் உரையுடன் இன்று தொடங்கியது.
அப்போது மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக குற்றம்சாட்டிய, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திடீரென அமளியில் ஈடுபட்டனர். மேலும், ஆளுநரின் இருக்கையை முற்றுகையிட்ட எதிர்க்கட்சியினர், காகிதங்களை சுருட்டி அவரை நோக்கி வீசியெறிந்தனர். அதை சபைக் காவலர்கள் தடுத்தனர். பேனர், பதாகைகளை கைகளில் ஏந்தியும் அவையின் மையப்பகுதிக்கு வந்து கூச்சல் இட்டனர்.
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை கூட்டம் பாஜக தலைமையிலான அரசு ஆட்சியை பிடித்த பிறகு, முதல் முதலாக தூர்தர்ஷனில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த காட்சிகள் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பான நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என ஆளுநர் எச்சரித்தார். எனினும், அவரது கோரிக்கையை கண்டுகொள்ளாத உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையில் பெரும் குழப்பம் நிலவியது.