ஜன. 15க்கு பிறகு 'பேடிஎம்' வாலட்டிலுள்ள பணம் ஸ்வாகா? தீயாய் பரவும் தகவல்! உண்மை என்ன தெரியுமா?
மும்பை: பேடிஎம் நிறுவனம் தற்போதைய டிஜிட்டல் உலகில் பண பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நகர்ப்புறங்களில் டீக்கடைகளில் கூட பேடிஎம் மூலமான பரிவர்த்தனை நடக்க தொடங்கிவிட்டது. இந்த நிறுவனம் ஒன்97 கம்யூனிகேஷன் என்ற நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் லிமிட்டட் என்ற வங்கியை தொடங்க பேடிஎம் நிறுவனம் ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்றுள்ளது. இதன் 51 சதவீத பங்குகளை இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் விஜய் சேகர் ஷர்மாவும், 49 சதவீதத்தை ஒன்97 நிறுவனமும் வைத்துள்ளது.

இதன்பிறகுதான், ஒரு வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவியது. அதில், பேடிஎம் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் வாலட்டிலுள்ள பணத்தையெல்லாம் வங்கி கணக்கிற்கு மாற்றிவிடும். பிறகு அதை பயன்படுத்த முடியாது. ஜனவரி 15ம் தேதிக்குள் வாலட்டிலுள்ள பணத்தை பயன்படுத்திவிடுங்கள், என்று அந்த தகவல் தீயாய் பரவியது.
இதுகுறித்து பேடிஎம் தனது வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளது. வங்கி தொடங்க உள்ளது உண்மை என்றபோதிலும், பேடிஎம் சேவையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், வழக்கம்போலவே பயன்பாடு இருக்கும் எனவும், வாலட்டிலுள்ள பணத்தை ஜனவரி 15க்கு பிறகும் கூட பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
வங்கி வசதி ஆரம்பிக்கப்பட்ட பிறகு இருப்பு தொகைக்கு வட்டி வழங்குவது, டெபிட் கார்டு வழங்குவது உள்ளிட்ட சேவைகளையும் வழங்குவோம் என பேடிஎம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications