லூன்... இந்தியாவில் ‘பறந்து பறந்து’ இண்டர்நெட் சேவை தரப்போகும் கூகுள்!
டெல்லி: லூன் எனப் பெயரிடப்பட்டுள்ள வானில் பறக்கவிடப்படும் பலூனிலிருந்து இணையதள சேவையை வழங்கும் கூகுளின் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
பாரம்பரிய கட்டமைப்பு முறையில் இணையதள சேவை வழங்குவதற்கு தற்போது அதிக செலவாகிறது. இதற்கு மாற்றாக வானில் சுமார் 20 கிமீ உயரத்தில் பறக்கவிடப்படும் பலூனிலிருந்து குறைந்த செலவில் இச்சேவை வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு பலூனிலிருந்தும் சுமார் 40 கிமீ சுற்றளவுள்ள பகுதிகளுக்கு இச்சேவை கிடைக்கும். இதற்கு தேவையான மின்சாரம் மாற்றுவழி மின் உற்பத்தி முறைகளான சூரிய ஒளி மற்றும் காற்று மூலம் பெறப்படும்.

வரப்பிரசாதம்...
இந்த வசதியானது கம்பி வடம் செல்ல இயலாத கிராமங்கள், மலைவாழ் பகுதிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றால் மிகையில்லை.

5வது நாடு...
நியூசிலாந்து, பிரேசில், இலங்கையைத் தொடர்ந்து ஐந்தாவது நாடாக இந்தியாவில் இச்சேவையை கூகுள் நிறுவனம் வழங்கவிருக்கிறது. இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.

4ஜி...
அரசு தொலைபேசி நிறுவனமான பி.எஸ்.என்.எல். உடன் இணைந்து 4ஜி தொழில்நுட்ப வசதியுடன் கூகுள் இச்சேவையை வழங்கும். இதன் மூலம் இணையதள வசதியில்லாத கிராமங்களில் கூட போன் வாயிலாகவே மக்கள் சுலபமாக இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

ட்ரோனுக்கு மறுப்பு...
ஆனால், தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் ட்ரோன் எனப்படும் சிறிய வகை பறக்கும் ஆளிலில்லா விமானம் மூலம் இணைய சேவை வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications