உக்ரைன் விவகாரம் : கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ரஷ்ய ராணுவம்? அதிபர் புடினுக்கு அனுமதி கொடுத்த செனட்
மாஸ்கோ : உக்ரைனில் உள்ள இரண்டு ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக அறிவித்த நிலையில் அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைனில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக ரஷ்ய ராணுவத்தை பயன்படுத்த ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேலவை அனுமதியளித்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மோதல்போக்கு தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில் எல்லையில் போர் பதற்றம் கடந்த சில நாட்களாக நீடித்து வருகிறது.
எல்லைப் பகுதிகளில் படைகளை நிறுத்தி உள்ள ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்கலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிளர்ச்சியாளர்களுக்கு சுதந்திரம்
கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி பிராந்தியங்களான டோனேட்ஸ்க், லூஹான்ஸ்க் ஆகியவற்றின் தலைவர்கள் இரு தினங்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதில், தங்கள் பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக அறிவிக்குமாறு அவர்கள் கோரியிருந்தனர். இந்தநிலையில் நேற்று தங்களது ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளை ரஷ்ய அதிபர் புதின் சுதந்திர நாடுகளாக அங்கீகரித்தார்.

உக்ரைன் அதிபர்
இதுகுறித்து செவ்வாயன்று பேசிய உக்ரேனிய தலைவர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரினார். உக்ரைனிலிருந்து பிரிந்து சென்ற பகுதிகளை அங்கீகரித்ததற்கு பதிலளிக்கும் வகையில் மாஸ்கோவுடனான உறவுகளைத் துண்டிக்கத் தயாரானதாகவும், உக்ரைன் மீது ஒரு பெரிய இராணுவத் தாக்குதலுக்கு வழி வகுக்கிறது என்றும் செய்தியாளர்களிடம் கூறினார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் நடவடிக்கைகளுக்கு மேற்கு நாடுகளிடமிருந்து விரைவான மற்றும் தண்டனையான பொருளாதார பதிலைக் கோருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அவசர கூட்டத்திற்கு அழைப்பு
உக்ரைன் யாருக்கும் பயப்படவில்லை எனத் தெரிவித்த அவர், "நாங்கள் எங்களது சொந்த நிலத்தில் இருக்கிறோம். நாங்கள் யாருக்கும் எதற்கும் பயப்பட மாட்டோம்" என கூறியுள்ளார். மேலும் உக்ரைனின் பகுதிகளை விட்டு கொடுக்கமாட்டோம் எனவும் தெரிவித்த வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவிற்கு எதிராக தங்களது நட்பு நாடுகளின் தெளிவான, பயனுள்ள நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறோம் என கூறியதோடு, உக்ரைன், ரஷ்யா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் தலைவர்களின் அவசர கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

புடினுக்கு அனுமதி
இந்நிலையில், உக்ரைனில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக நாட்டிற்கு வெளியே ரஷ்ய ராணுவத்தை அதிபர் விளாடிமிர் புடின் பயன்படுத்த அனுமதிப்பதற்கு ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேலவை வாக்களித்துள்ளது. மொத்தம் 153 ரஷ்ய செனட்டர்கள் இந்த முடிவை ஆதரித்த நிலையில், யாரும் எதிராக வாக்களிக்கவில்லை . இரண்டு கிழக்கு உக்ரேனியப் பகுதிகளை முறையாக அங்கீகரித்த பிறகு, வெளிநாட்டில் ரஷ்யாவின் ஆயுதப் படைகளைப் பயன்படுத்துவதற்கு புடின் அனுமதி கேட்டதாகவும், இதனையடுத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாக ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேலவை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications