பம்பையை நாளை வந்தடைகிறது தங்க அங்கி.. டிச.26-ல் சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை
பம்பை: சபரிமலையில் ஐயப்பனுக்கு அணிவிக்க கொண்டுவரப்படும் தங்க அங்கி நாளை பம்பையை வந்தடைகிறது. அங்கிருந்து சன்னிதானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் டிச.26-ல் மண்டல பூஜைகள் நடைபெறும்.
கொரோனா கால கடும் கட்டுப்பாடுகளுடன் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது அதிகபட்சமாக 5,000 பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுகின்றனர்.
கொரோனா பரிசோதனை முடிவுகள், ஆன்லைன் முன்பதிவு ஆகியவை இருந்தால்தான் பக்தர்கள் நிலக்கல்லை விட்டே நகர முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்த ஆண்டு சபரிமலை சீசன் களை இழந்து சொற்ப எண்ணிக்கையிலான பக்தர்களுடன் காணப்படுகிறது.

ஐயப்பனுக்கு தங்க அங்கி
இதனிடையே பத்தனம்திட்டா ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க சங்கி ஊர்வலம் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த தங்க அங்கியானது நாளை காலை பம்பையை வந்தடையும்.

பம்பையை வந்தடைகிறது தங்க அங்கி
பம்பையில் பாரம்பரிய முறைப்படி தேவஸ்தான ஊழியர்கள் தங்க அங்கியைப் பெற்றுக் கொண்டு தலை சுமையாகவே சன்னிதானத்துக்கு சுமந்து செல்வர். 18-ம் படி வழியாக கொண்டு செல்லப்பட்டு நாளை மாலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

மலையேற தடை
இதனால் உச்சிகால பூஜை முடிந்தது முதல் மாலை 6.30 மணிக்கு பூஜைகள் முடியும் வரை பம்பையில் இருந்து யாத்திரையாக பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதன்பின்னர் டிசம்பர் 26-ல் நண்பகல் 12 மணிக்கு சன்னிதானத்தில் மண்டலபூஜைகள் நடைபெறும்.

ஜன.14-ல் மகரவிளக்கு பூஜை
இதனைத் தொடர்ந்து கோவில் நடை சாத்தப்பட்டு மகரபூஜைகளுக்காக டிசம்பர் 30-ந் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும்.












Click it and Unblock the Notifications