சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மண்டல பூஜை - மலையெங்கும் சரணகோஷம்
திருவனந்தபுரம்: பிரசித்த பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மண்டல பூஜை நடைபெறுவதை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிய தொடங்கியுள்ளனர். மலையெங்கும் ஐயப்ப பக்தர்கள் எழுப்பும் சரண கோஷம் ஒலிக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோவில் வருடாந்திர மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. 41 நாள் நடைபெறும் மண்டல காலம் நாளை நடக்கும் சிகர நிகழ்ச்சியாக மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது. நாளை காலை 11.02க்கும், 11.40 மணிக்கும் இடையே பிரசித்த பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது.
மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்ப சாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னரான பாலராமவர்மா சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கிய இந்த 450 பவுன் எடைகொண்ட தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டிருந்தது. இது கடந்த 23ம் தேதி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.

பம்பையில் தங்க அங்கி
தங்க அங்கி இன்று பிற்பகலில் பம்பைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் பம்பை கணபதிகோயில் அருகே அங்கி பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்படும். மாலை மூன்று மணிக்கு பெட்டகத்தில் அங்கி வைக்கப்பட்டு ஐயப்பா சேவாசங்க தொண்டர்கள் மூலம் தலைச்சுமடாக சன்னிதானத்துக்கு கொண்டு வரப்படும்.

ஐயப்பனுக்கு அணிவிப்பு
மாலை 5.30 மணிக்கு சரங்குத்தி வரும் அங்கிக்கு தேவசம்போர்டு அதிகாரிகள் வரவேற்பு கொடுத்து அழைத்து வருவர். 6.20 மணிக்கு 18ம் படி வழியாக சன்னிதானம் வரும் அங்கியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு, மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி ஆகியோர் வாங்கி நடை அடைத்து ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிப்பர். தொடர்ந்து நடை திறந்து தீபாராதனை நடைபெறும்.

நெய்யபிஷேகம்
நாளை மண்டல பூஜை நடைபெறுவதால் நெய்யபிஷேக நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3.20 மணி முதல் காலை 9.30 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் செய்யப்படுகிறது. இதன்பிறகு காலை 11.02க்கும், 11.40க்கும் இடையே மண்டல பூஜை நடைபெறும். பின்னர் பகல் 1 மணி அளவில் கோயில் நடை சாத்தப்படும். இதன் பிறகு மாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

மண்டல பூஜை நாளை நிறைவு
இரவு பூஜைக்கு பின்னர் இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். நாளையுடன் இவ்வருட மண்டல கால பூஜைகள் நிறைவடையும். மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை நடை திறக்கப்படும். இன்று தங்க அங்கி சன்னிதானத்திற்கு வருவதை முன்னிட்டு இன்று பகல் முதல் பக்தர்கள் மலை ஏறுவதற்கும், தரிசனம் செய்வதற்கும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இன்று பகல் 12.30 மணிக்கு பின்னர் பக்தர்கள் பம்பைலிருந்து சன்னிதானத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

குவியும் கூட்டம்
தங்க அங்கி ஊர்வலம் மரக்கூட்டத்தை அடைந்த பிறகே பக்தர்கள் சன்னிதானத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மண்டல பூஜைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதாலும், தங்க அங்கியில் ஜொலிக்கும் ஐயப்பனை தரிசிக்கவும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. இதனால் சபரிமலை எங்கும் சரணகோஷம் ஒலிக்கிறது.












Click it and Unblock the Notifications