சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை: நவ.16-ல் நடை திறப்பு
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜையை முன்னிட்டு இம்மாதம் (நவம்பர்) 16-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும் என
திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
கார்த்திகை மாதம் முதல் தேதி மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் கடுமையாக விரதம் இருக்கும் காலம் மண்டல பூஜை காலமாகும். இந்த நாளில் சபரிமலை கோவிலில் ஐயப்பனை தரிசிப்பது விசேசமானதாக பக்தர்கள் கருதுகின்றனர். இந்த ஆண்டு மண்டல பூஜை தொடர்பாக கமிஷனர் பி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கை:
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜையை முன்னிட்டு இம்மாதம் (நவம்பர்) 16-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 41 நாள் சிறப்பு பூஜைக்கு பின், டிசம்பர் 27-ந்தேதி மண்டல பூஜை விமரிசையாக நடைபெறும். அன்று இரவு கோவில் நடை அடைக்கப்படும். பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் மீண்டும் திறக்கப்படும்.
அடுத்த ஆண்டு (2015) ஜனவரி 14-ந்தேதி மகர விளக்கு சிறப்பு பூஜை நடைபெறும். மகரவிளக்கு பூஜைக்கு பின் சபரிமலை கோவில் நடை, ஜனவரி மாதம் 20-ந்தேதி பந்தளம் கொட்டாரம் ராஜபிரதிநிதியின் சாமி தரிசனத்திற்கு பின் அடைக்கப்படும்.
2015ஆம் ஆண்டு மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்படும் தேதி விவரம்:

மாசி மாத பூஜை
மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை, 2015 பிப்ரவரி மாதம் 12-ந் தேதி மாலை திறக்கப்படும். 5 நாள் சிறப்பு பூஜைக்கு பின் 17-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

ஐயப்பன் கோவில் திருவிழா
பங்குனி மாத பூஜைக்காக 2015 மார்ச் 14-ந் தேதி நடை திறக்கப்பட்டு, 19-ந்தேதி வரை பூஜைகள் நடைபெறும். சபரிமலை ஐயப்பன் கோவில் ஆண்டு திருவிழாவுக்காக, மார்ச் 24-ந்தேதி மாலை நடை திறக்கப்படும். 25-ஆம்தேதி காலை கோவிலில் திருவிழா கொடி ஏற்றப்படும் அன்று முதல் ஏப்ரல் 3-ஆம்தேதி வரை விழா நடைபெறும். 3-ஆம்தேதி பம்பை நதியில் அய்யப்பனுக்கு ஆராட்டும் நடைபெறும்.

சித்திரை விஷூ
சித்திரை மாத பூஜைக்காக ஏப்ரல் 10-ஆம்தேதி நடை திறக்கப்பட்டு, 19-ஆம்தேதி வரை பூஜைகள் நடைபெறும். விஷூ பண்டிகை ஏப்ரல் 15-ந்தேதி சபரிமலையில் கொண்டாடப்படும்.

பிரதிஷ்டை தினம்
வைகாசி மாத பூஜைக்காக 2015 மே 14-ஆம்தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படும். 5 நாள் பூஜைக்கு பின் 19-ஆம்தேதி இரவு நடை அடைக்கப்படும். பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு மே 28-ஆம்தேதி கோவில் நடை திறக்கப்படும். 29-ஆம்தேதி பிரதிஷ்டை வழிபாடு நடைபெறும்.

ஆனி, ஆடி, ஆவணி
ஆனி மாத பூஜைக்காக ஜூன் 15-ஆம்தேதி சபரிமலை நடை திறக்கப்படும். 5 நாள் சிறப்பு பூஜைக்கு பின் ஜூன் 20-ஆம்தேதி இரவு நடை அடைக்கப்படும். ஆடி மாத பூஜைக்காக ஜூலை மாதம் 16-ஆம்தேதி மாலையில் நடை திறக்கப்பட்டு, 21-ஆம் தேதி அடைக்கப்படும். ஆவணி மாத பூஜைக்காக ஆகஸ்டு 16-ஆம்தேதி கோவில் திறக்கப்பட்டு, 21-ஆம் தேதி நடை அடைக்கப்படும்.

ஓணம் பண்டிகை
சிறப்பு வாய்ந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஆகஸ்டு 26-ஆம்தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டு 30-ஆம்தேதி வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

புரட்டாசி, ஐப்பசி
புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 16-ஆம்தேதி நடை திறக்கப்பட்டு, 21-ஆம்தேதி அடைக்கப்படும். ஐப்பசி மாத பூஜைக்காக அக்டோபர் மாதம் 17-ஆம்தேதி மாலையில் நடை திறக்கப்படும். தொடர்ந்து 5 நாள் நடைபெறும் சிறப்பு பூஜைக்கு பின் அக்டோபர் 22-ஆம்தேதி கோவில் நடை அடைக்கப்படும். ஸ்ரீசித்திரை ஆட்ட திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 9-ஆம்தேதி கோவில் நடை திறக்கப்படும். 10-ஆம்தேதி சிறப்பு பூஜை நடைபெறும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications