சபரிமலை ஐயப்பன் கோயில் தீர்ப்புக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு.. அடுத்து என்ன?
டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு, சமீபத்தில் சபரிமலை தொடர்பான வழக்கில் வழங்கிய தீர்ப்பில், அனைத்து வயது பெண்களும், சபரிமலையில் வழிபட அனுமதி உண்டு என்று தெரிவித்தனர்.
இந்த தீர்ப்புக்கு கேரள பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். நாடு முழுக்கவுமே, பெண்கள் போராட்டங்களை அதிகரித்து வருகிறார்கள்.

அரசியல் சாசனத்திற்கு எதிரானது
இந்த நிலையில்தான், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில், அதன் தலைவர், ஷியாலஜா விஜயன், சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எந்த ஒரு மதத்தின் வழிபாட்டு முறையிலும் தலையிடக் கூடாது என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படை என்பதால் இந்த தீர்ப்பு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனே தேவை
உடனடியாக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு தீர்ப்பை வழங்க வேண்டும். மேம்போக்காக இந்த உத்தரவை பிறப்பிக்காமல், அறுதியிட்டு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

புதிய தலைமை நீதிபதி
சபரிமலை வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சமீபத்தில் ஓய்வு பெற்றுவிட்டார். இப்போது ரஞ்சன் கோகாய் புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுள்ள நிலையில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்ட வல்லுநர்கள் கருத்து
இதுகுறித்து வழக்கறிஞர் தமிழ் மணி என்பவர் கூறுகையில், ஏற்கனவே உள்ள வழக்கில் பிரதிவாதியாக இல்லாத ஒரு புதிய அமைப்பு வழக்கு தொடர்ந்திருப்பதால், இதை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்குமா என்பது சந்தேகம் என்றார். வழக்கில் பிரதிவாதியாக இருந்த தேவசம் போர்டு, இந்த வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்ய மாட்டோம் என அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications