முடிவுக்கு வந்த 20 ஆண்டு திருமணம்.. மனைவியை விவாகரத்து செய்தார் காங்கிரஸ் இளம் தலைவர் சச்சின் பைலட்
ஜெய்பூர்: ராஜஸ்தானில் போட்டியிடும் காங்கிரஸ் இளம் தலைவர் சச்சின் பைலட் தனது வேட்பு மனுவில் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றதைக் குறிப்பிட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கே அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில், அங்கே காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

ராஜஸ்தானை பொறுத்தவரை அங்கே ஒரே கட்டமாக நவ. 25ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அன்றைய தினம் அங்குள்ள 200 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், டிச. 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ராஜஸ்தான்: அங்கே காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடியாகப் போட்டி நிலவுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக அங்கே காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் நிலையில், ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்பதே காங்கிரஸின் இலக்காக இருக்கிறது. அதேநேரம் மற்றொருபுறம் பாஜக எப்படியாவது காங்கிரஸை வீழ்த்தி மீண்டும், ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் இறங்குகிறது.
இதனால் அங்கே பிரசாரத்தில் அனல் பறக்கிறது. ராஜஸ்தான் காங்கிரஸ் இளம் தலைவரும் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வருமான சச்சின் பைலட் டோங்க் சட்டசபை தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த முறை அவர் பாஜகவின் யூனுஸ் கானை 54,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த முறஐ மீண்டும் டோங்க் சட்டசபையில் களமிறங்கும் சச்சின் பைலட், இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
சச்சின் பைலட்: வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், பைலட் பூதேஷ்வர் மகாதேவ் கோவிலில் பிரார்த்தனை செய்தார். பின்னர் அவர் தனது ஆதரவாளர்களுடன் படா குவானில் இருந்து டோங்க் நகரில் உள்ள படேல் சௌக் வரை ஊர்வலம் சென்றார். அதைத் தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். இதற்கிடையே வேட்பு மனுவில் அவர் கூறிய விஷயம் தான் இப்போது பேசுபொருள் ஆகியுள்ளது.
ராஜஸ்தான் காங்கிரஸின் இளம் தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் கடந்த 2004ஆம் ஆண்டில் சாரா அப்துல்லா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். சாரா அப்துல்லா ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாட்டின் தலைவரும் காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லாவின் மகள் ஆவார். இந்தத் தம்பதிக்கு ஆரன் மற்றும் வேஹான் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி விவாகரத்து பெற்றுள்ளனர்.
விவாகரத்து: ராஜஸ்தான் மாநில தேர்தலில் போட்டியிட பைலட் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், மனைவி குறித்த தகவல்கள் இருந்த இடத்தில் விவாகரத்து பெற்றவர் என்று குறிப்பிட்டுள்ளார். 46 வயதான சச்சின் பைலட் தான் விவாகரத்து பெற்றுள்ளதைப் பொதுவெளியில் சொல்வது இதுவே முதல் முறை. சச்சின் பைலட் தனது பிரமாண பத்திரத்தில் தனது மகன்கள் இருவரும் தன்னுடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஐந்தாண்டுகளில் சச்சின் பைலட்டின் சொத்து மதிப்பு சுமார் இரு மடங்கு உயர்ந்துள்ளது அவரது பிரமாண பத்திரத்தில் தெரிய வந்துள்ளது. 2018 ஆம் ஆண்டில், அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 3.8 கோடி ரூபாயாக இருந்த நிலையில், இப்போது 2023இல் அவரது சொத்து மதிப்பு 7.5 கோடி ரூபாய் மதிப்பாக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications