ராஜ்யசபா வராமல் சச்சின் ஆப்சென்ட் ஆவதா இனிமே யாரும் சொல்ல முடியாது!
டெல்லி: குடும்ப காரணங்களுக்காக விடுமுறை அளிக்க வேண்டும் என்று கேட்டதன்பேரில், சச்சின் தெண்டுல்கருக்கு நடப்பு கூட்டத்தொடரில் பங்கேற்காமல் இருக்க விடுப்பு அளித்துள்ளார் ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி. எனவே இனிமேல் சச்சின் ஆப்சென்ட் ஆகிவிட்டதாக யாரும் கூற முடியாது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், ஹிந்தி நடிகை ரேகா இருவரும் ராஜ்யசபாவில் நியமன எம்.பி.க்களாக உள்ளனர். சச்சின் 3 நாட்கள் மட்டுமே ராஜ்யசபாவிற்கு வந்த நிலையில், ரேகா 7 நாட்கள் மட்டுமே வந்திருந்தார். நட்சத்திரங்களின் இந்த செயல் விமர்சனங்களை சந்தித்தது.

சச்சினுக்கு விலக்கு
இந்நிலையில், நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க விலக்கு அளிக்கும்படி சச்சின் டெண்டுல்கர் ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரிக்கு கோரிக்கைவிடுத்திருந்தார். குடும்பத்தாரின் உடல் நிலையை காரணம் காண்பித்து விடுப்பு கேட்டிருந்த சச்சினுக்கு, அவர் கேட்டபடியே நடப்பு கூட்டத்தொடரில் பங்கேற்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

உறுப்பினர்கள் எதிர்ப்பு
ராஜ்யசபாவில் இன்று, சபையின் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அப்போது சமாஜ்வாதி எம்.பி. நரேஷ் அகர்வால், காங்கிரசின் சத்யவ்ரத் சதுர்வேதி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.

சட்டப்படி சச்சினை நீக்க முடியாது
இதற்கு பதிலளிக்கும் வகையில் குரியன் பேசுகையில், நாடாளுமன்ற விதி 104ன்படி எம்.பி.க்கள் தொடர்ந்து 60 நாட்களுக்கும் மேலாக வராமல் இருந்தால்தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அப்போதுதான் அவர்களது இடம் காலியாக இருப்பதாக கருத முடியும்.

இந்தாண்டு இன்னும் வரவில்லை
கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சச்சின் தெண்டுல்கர் ராஜ்யசபா உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். கூட்டத் தொடரில் இதுவரை சச்சின் தெண்டுல்கர் 3 நாட்கள் மட்டும் வந்துள்ளார். 40 நாட்கள் சபைக்கு வரவில்லை. கடைசியாக அவர் 2013ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி சபைக்கு வந்தார்.

ரேகாவும் விதிமுறையை மீறவில்லை
நடிகை ரேகா 7 நாட்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளார். அவர் சபைக்கு வராத நாட்கள் 40க்கும் குறைவாகத்தான் உள்ளது. கடைசியாக அவர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி வந்தார். இவர்கள் விதிகளை மீறி நடந்து கொள்ளவில்லை. எனவே டெண்டுல்கர், ரேகா இருவரையும் தற்காலிக பதவி நீக்கம் செய்ய இயலாது". இவ்வாறு அவர் கூறினார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 7ம்தேதி தொடங்கிய நிலையில், இம்மாதம் 14ம்தேதி வரை நடக்கிறது. அதுவரை சச்சினுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications