கோட்சே தீவிரவாதியா? அவர் ஒரு தேச பக்திமான்.. கமலை எச்சரிக்கும் சாத்வி பிரக்யா!
நாதுராம் கோட்சே தீவிரவாதி கிடையாது அவர் தேச பக்திமான் என்று பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா தாக்குர் தெரிவித்துள்ளார்.
போபால்: நாதுராம் கோட்சே தீவிரவாதி கிடையாது அவர் தேச பக்திமான் என்று பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா தாக்குர் தெரிவித்துள்ளார்.
காந்தியை கொன்ற கோட்சேவை குறித்து கமல்ஹாசன் பேசியது பெரிய வைரலாகி உள்ளது. நாடு முழுக்க இவரது பேச்சு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் அரவக்குறிச்சி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் பேசியது பெரிய வைரலானது.
கமல்ஹாசன் தனது பேச்சில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே, என்று குறிப்பிட்டார். கமல்ஹாசனின் பேச்சு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆர்எஸ்எஸ், இந்து மகா சபா ஆகிய இந்து அமைப்புகள் கமல்ஹாசனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதேபோல் பாஜகவும் கமல்ஹாசனின் பேச்சை கண்டித்து இருந்தது. பிரதமர் மோடி கூட இதுகுறித்து கருத்து தெரிவித்தார்.
இதுகுறித்து தற்போது பாஜகவின் போபால் தொகுதி வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், நாதுராம் கோட்ஸே ஒரு தேச பக்திமான். அவர் முன்பு மட்டும் தேச பக்தியோடு இருக்கவில்லை. அவர் எப்போதும் தேச பக்தியோடு இருந்தவர்.
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டே தீர வேண்டும்.. எச். ராஜா
அவரை தீவிரவாதி என்று அழைப்பது மிக தவறு. அவரை தீவிரவாதி என்று அழைக்கும் நபர்கள் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். தாங்கள் முதலில் சரியாக இருக்கிறோமோ என்று பார்க்க வேண்டும்.
கோட்ஸே மீது குற்றச்சாட்டு வைக்கும் நபர்களுக்கு தேர்தலுக்கு பின் கடுமையான தண்டனை வழங்கப்படும் என சாத்வி தெரிவித்து இருக்கிறார். செப்டம்பர் 29, 2008ல் மும்பையில் மலேகான் பகுதியில் இரண்டு பைக்குகளில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த மோசமான சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள்.
இந்த மலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர்தான் இந்த சாத்வி பிரக்யா தாக்குர். பெயிலில் வெளியே வந்த இவர் தற்போது பாஜக சார்பாக மத்திய பிரதேச மாநிலம் போபாலில் போட்டியிடுகிறார். இவர் தொடர்ந்து சர்ச்சையாக நிறைய பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.