என்ன காரணத்திற்காகவும் நான் என் தேசிய விருதைத் திருப்பித் தர மாட்டேன்...: நடிகை ஷோபனா
திருவனந்தபுரம்: மற்ற எழுத்தாளர்கள் ஏன் தங்களது விருதுகளைத் திருப்பித் தருகிறார்கள் எனத் தெரியவில்லை, ஆனால், நான் என் தேசிய விருதுகளைத் திருப்பித் தர மாட்டேன் எனத் நடிகை ஷோபனா தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் நடிகையாக அறிமுகமான ஷோபனா, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் இது நம்ம ஆளு, தளபதி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நாயகியாக நடித்த ஷோபனா, சிறந்த நாட்டியக் கலைஞரும் கூட.
இந்நிலையில், ஷோபனா திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாக நியூஸ் மினிட் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-
விருதுகள்...
விருதுகள் உரிய நேரத்தில் தரப்பட வேண்டும். காலம் தாழ்த்தி விருதுகள் தரப்பட்ட காரணங்களால் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், நான் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய மிகக் குறுகிய காலத்திலேயே தேசிய விருதுகளைப் பெற்று விட்டேன்.
திருப்பித் தர மாட்டேன்...
அதனால் என்ன காரணங்களுக்காகவும் நான் என் விருதுகளைத் திருப்பித் தர மாட்டேன். மற்றபடி என்ன சர்ச்சை காரணங்களுக்காக சிலர் தங்களது விருதுகளைத் திருப்பித் தருகிறார்கள் என்பது குறித்து எனக்குத் தெரியாது' எனத் தெரிவித்துள்ளார்.
போலி பேஸ்புக் பக்கம்...
மேலும், அவர் மலையாளப் படங்களே பார்ப்பதில்லையாம். அதோடு தனது உண்மையான பேஸ்புக் பக்கத்தை விட, போலியான பேஸ்புக் பக்கத்திற்கே அதிக பாலோயர்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எழுத்தாளர்கள்...
சமீபகாலமாக நாட்டில் அதிகரித்து வரும் சகிப்புத் தன்மையின்மை மற்றும் மதவாத சூழலுக்கு எதிராக கொதிப்படைந்திருக்கும் சில எழுத்தாளர்கள், விருதுகளைத் திருப்பிக் கொடுத்து தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.