சாய்பாபா வழிபாடு சர்ச்சையில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு
டெல்லி: சாய்பாபாவை வழிபடுவது குறித்த சர்ச்சையில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. பக்தர்கள் விரும்பினால் சிவில் அல்லது கிரிமினல் வழக்கு தொடரலாம் என்று நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
துவாரகாபீடத்தைச் சேர்ந்த சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி சமீபத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார். ‘ஷீரடி சாய்பாபா வழிபாட்டுக்கு உரியவர் அல்ல. இந்து தெய்வங்களுக்கு இணையாக சாய்பாபாவை வழிபடுவது தவறு. அவரது சிலை மற்றும் படங்களை கோயில்களில் இருந்து அகற்ற வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இதை எதிர்த்து சாய்தாம் அறக்கட்டளை சார்பில் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சாய்பாபா கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில் களை நிர்வகித்து வரும் இந்த அறக்கட்டளை தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப் பதாவது:
துவாரகாபீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி, சாய்பாபாவுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதனால், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான சாய்பாபா பக்தர்களின் மனம் புண்பட்டுள்ளது. அவதூறான கருத்துகளை வெளியிட அவருக்கு தடை விதிக்கவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். சாய்பாபா சிலைகளை கோயில்களில் இருந்து அகற்ற தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், ஏ.கே.கோயல், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதி பதிகள், "சாய்பாபா பக்தர்கள் விரும்பினால், வழிபடும் உரிமைக்கு இடையூறு விளைவிப்பதாகக் கூறி, சிவில் அல்லது கிரிமினல் வழக்கு தொடரலாம்" என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications