பட்டோடி அரண்மனையில் குடித்துக் கும்மாளம் போட்ட ஷர்மிளா தாகூரின் “சூப்பர் குடும்பம்”!
பட்டோடி, ஹரியானா: ஹரியானா மாநிலம் பட்டோடி கிராமத்தில் உள்ள தங்களுக்குச் சொந்தமான அரண்மையில் குடித்துவிட்டு, கும்மாளம் அடித்த நடிகை ஷர்மிளா தாகூர், அவரது மருமகள் நடிகை கரீனா மற்றும் மகன் சைப் அலிகானுக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் கடந்த 15 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
வரும் 22 ஆம் தேதி வரை இங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்.

ஷர்மிளா தாகூர்:
ஹரியானாவின் முன்னாள் நவாப்பும், பட்டோடி வம்சத்தை சேர்ந்த பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் மன்சூர் அலி கான் பட்டோடியின் மனைவியும், முன்னாள் பாலிவுட் கதாநாயகியுமான நடிகையுமானவர் ஷர்மிளா தாகூர்.
அரண்மனையில் மதுவிருந்து:
தனது மகன் சைப் அலிகான் பட்டோடியுடன் சேர்ந்து அம்மாநிலத்தில் உள்ள பட்டோடி தொகுதியில் உள்ள தனது அரண்மனையில் நேற்று முன்தினம் இரவு சிலருக்கு மது விருந்து அளித்தார்.
பொதுமக்கள் ஆத்திரம்:
இந்த நிகழ்ச்சியின்போது மிகுந்த ஓசை எழுப்பக்கூடிய ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி அரண்மனையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஷர்மிளா தாகூரும், சைப் அலி கானும் இடையூறு செய்ததாக அங்குள்ள பொதுமக்கள் பட்டோடி தொகுதி தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தனர்.
கோர்ட் மூலமாக நோட்டீஸ்:
இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட தேர்தல் அலுவலர் உரிய அனுமதியின்றி ஒலிபெருக்கிகளை பயன்படுத்தியதற்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து முன் அனுமதி பெறாமல் மது விருந்து அளித்ததற்கும் வரும் 21 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஷர்மிளா தாகூருக்கும், அவரது மகனான பாலிவுட் கதாநாயகன் சைப் அலி கானுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications