சகோதரி என்று கூறிக் கொண்டு ஜெயலலிதாவை பார்க்க சிறைக்கு வந்த சைலஜாவுக்கு அனுமதி மறுப்பு!
ஜெயலலிதாவின் பூர்வீகம் மண்டியா மாவட்டத்திலுள்ள மேல்கோட்டையாகும். அவர் தனது பள்ளிப்படிப்பை பெங்களூரிலுள்ள பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் முடித்தார்.
இந்நிலையில் சைலஜா என்ற பெண் தன்னை ஜெயலலிதாவின் தங்கை என்று கூறி பல வருடங்கள் முன்பே, கன்னட மீடியாக்களுக்கு பேட்டியளித்திருந்தார். இதையடுத்து அந்த மீடியாக்களுக்கு ஜெயலலிதா நோட்டீஸ் அனுப்பினார்.
இந் நிலையில் அந்த சைலஜா இன்று தனது மகள் அம்ருத்தாவை அழைத்துக் கொண்டு ஜெயலலிதாவை பார்த்து நலம் விசாரிக்க பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்கு வந்திருந்தார்.
ஆனால் சிறை அதிகாரிகள், அவரை ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா யாரையும் பார்க்க தயாராக இல்லை என்று கூறிவிட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறிது நேர காத்திருப்புக்கு பிறகு சைலஜா கிளம்பி சென்றார். முன்னதாக சைலஜா நிருபர்களிடம் கூறுகையில், "எனது அக்கா தவறு செய்திருக்க வாய்ப்பில்லை. எனவே ஹைகோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.