ஏமனில் சிக்கித் தவித்த 349 இந்தியர்கள் மீட்பு: இந்திய கடற்படை அபாரம்
டெல்லி: உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனில் வசித்து வந்த 349 இந்தியர்களை இந்திய கடற்படை செவ்வாய்க்கிழமை இரவு மீட்டுள்ளது.
உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனில் வசித்து வரும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இந்நிலையில் ஏமனில் சிக்கித் தவிக்கும் இந்தியரக்ளை மீட்க கடற்படைக்கு சொந்தமான 2 கப்பல்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு கிளம்பியது.

இந்நிலையில் ஐஎன்ஸ் சுமித்ரா என்ற கப்பல் ஏடன் துறைமுகத்திற்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்று அங்கு காத்திருந்த 349 இந்தியர்களை மீட்டு அருகில் உள்ள ஜிபோட்டி நாட்டுக்கு அழைத்துச் சென்றது. மீட்கப்பட்டவர்களில் 220 பேர் ஆண்கள், 101 பேர் பெண்கள் மற்றும் 28 பேர் குழந்தைகள்.
ஜிபோட்டியில் இருந்து அந்த 349 பேரும் விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகிறார்கள். ஏமனில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கு சிக்கித் தவிக்கும் 4 ஆயிரம் இந்தியர்களை மீட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.
அதன்படி முதல் தவணையாக 349 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை ஏமனில் இருந்து அழைத்து வரும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட வெளியுறுவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் ஜிபோட்டியில் முகாமிட்டுள்ளார்.
இந்தியர்களை மீட்கும் பணிக்கு ஆபரேஷன் ராஹத் என்று பெயரிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணியில் 5 கப்பல்கள் மற்றும் 4 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications