கவுரி லங்கேஷ், கல்புர்கி.. இரண்டு பேரையும் கொன்றது ஒரே துப்பாக்கிதான்.. சோதனையில் அதிர்ச்சி தகவல்
கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட அதே துப்பாக்கிதான் எழுத்தாளர் கல்புர்கியை கொலை செய்யவும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று உண்மை கண்டறியப்பட்டுள்ளது.
Recommended Video
பெங்களூர்: கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட அதே துப்பாக்கிதான் எழுத்தாளர் கல்புர்கியை கொலை செய்யவும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற உண்மை கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் தார்வாட் நகரை சேர்ந்த எழுத்தாளர் கல்புர்கி ஆகஸ்ட் 30, 2015ல் அவரது வீட்டில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில், கோவாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சனாதன் சன்ஸ்தா அமைப்புக்கு தொடர்பிருக்கலாம் என கர்நாடக போலீசார் சந்தேகித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கர்நாடகாவில் ''பத்திரிக்கா" என்ற பெயரில் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார் பிரபல பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ். தனது பத்திரிக்கையில் வலது சாரிகள் குறித்தும், ஆர்.எஸ்.எஸ், பாஜக குறித்தும் அடிக்கடி கட்டுரைகள் எழுதி வந்தார்.
இந்த நிலையில் 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் இந்து யுவ சேனா அமைப்பை சேர்ந்த முக்கியமான நிர்வாகியான கே டி நவீன் குமார் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே கே டி நவீன் குமார் தன்னுடைய கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார். கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவர் விசாரிக்கப்பட்டார். எப்படி இந்த கொலை சம்பவம் நடந்தது என்று ஒவ்வொரு விவரமாக அவர் தெரிவித்தார்.
இந்த கொலை குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சில மாதங்களுக்கு முன் இந்த கொலையில் பயன்படுத்தபட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. அதன்படி கவுரி லங்கேஷை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட அதே துப்பாக்கிதான் கல்புர்கியை கொல்லவும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
தடயவியல் சோதனையில் இரண்டு கொலைக்கும் ஒரே துப்பாக்கியை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. இந்த அதிர்ச்சி அளிக்கும் தகவலால், கல்புர்கியை கொலை செய்ததும், இந்துத்துவா தீவிரவாதிகள்தான் என்பது உறுதியாகி உள்ளது.