மனைவிக்கு உடம்பு சரியில்லை: பரோலை 30 நாட்கள் நீட்டிக்க கோரும் நடிகர் சஞ்சய் தத்
மும்பை: உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் மனைவி மான்யதாவை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள பரோலை மேலும் 30 நாட்கள் நீட்டிக்கக் கோரி விண்ணப்பித்துள்ளார் நடிகர் சஞ்சய் தத்.
1993ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகளின் போது தனது வீட்டில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததற்காக இந்தி நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. அவர் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் அவர் மீதமுள்ள தண்டனை காலத்தையும் சிறையில் கழிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் கடந்த மே மாதம் போலீசில் சரண் அடைந்தார். சரண் அடைந்த அவர் புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் அடைக்கப்பட்டார்.
பரோல்
சஞ்சய் தத்தின் மனைவி மான்யதாவுக்கு நுரையீரலில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சஞ்சய் ஒரு மாத பரோலில் கடந்த டிசம்பர் மாதம் 21ம் தேதி வெளியே வந்தார்.
அறுவை சிகிச்சை
மான்யதாவுக்கு அறுவை சிகிச்சை நடந்ததால் சஞ்சயின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி 21ம் தேதி சிறைக்கு திரும்ப வேண்டிய அவர் வரும் 21ம் தேதி சிறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது.
பரோல் நீட்டிப்பு
ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் மனைவியை அருகில் இருந்து கவனிக்க வேண்டும் என்று கூறி தான் சஞ்சய் பரோல் கேட்டார். இந்நிலையில் அதே காரணத்தை கூறி பரோலை மேலும் 30 நாட்கள் நீட்டிக்க கோரியுள்ளார்.
கண்டனம்
முன்னதாக சஞ்சய் தத்துக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாகக் கூறி அரசியல் கட்சியினர் ஏர்வாடா சிறை முன்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.