தேசதுரோக குற்றச்சாட்டின் கீழ் டெல்லி பேராசிரியர் கிலானி திடீர் கைது
டெல்லி: நாடாளுமன்றம் மீதான தாக்குதல் வழக்கில் இருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட டெல்லி பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானி இன்று தேச துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் (ஜே.என்.யூ)வில் கடந்த 9-ந் தேதியன்று அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நாளை வீரவணக்க நாளாக மாணவர்கள் அனுசரித்தனர். இந்நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக இந்துத்துவா அமைப்புகள் புகார் தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்து டெல்லி ஜே.என்.யூ. மாணவர் சங்கத் தலைவர் கன்னையாகுமார் தேசத் துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் டெல்லியை உலுக்கி வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் கடந்த 10-ந் தேதி செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது. அதில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகள் முன்வைக்கப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது.
இந்த செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததாக டெல்லி பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் கிலானி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது தேச துரோகக் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2001-ம் ஆண்டு நாடாளுமன்றம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர்தான் இந்த கிலானிதான் என்பது குறிப்பிடத்தக்கது.