சாரதா நிதி நிறுவன மோசடி: நளினி சிதம்பரத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்புகிறது அமலாக்கப் பிரிவு
டெல்லி: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினிக்கு அமலாக்கப் பிரிவு மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளது.
சாரதா நிதி நிறுவனத் நிறுவன தலைவர் சுதிப்தாசென்னிடம் விசாரணை நடத்தியபோது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கு பணம் கொடுத்ததாக கூறியிருந்தார். அதில் காங்கிரஸ் தலைவர் மனோரஞ்சனாசிங் மூலம் அப்போதைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரத்துக்கு பணம் கொடுத்ததாகவும் அவர் கூறினார்.
இது குறித்து விசாரிப்பதற்காக அமலாக்க பிரிவினர் நளினி சிதம்பரத்துக்கு கடந்த மாதம் சம்மன் அனுப்பினர். அதில், கொல்கத்தாவில் உள்ள அமலாக்க பிரிவு அலுவலகத்துக்கு நேரில் ஆஜராகும்படி கூறியிருந்தனர்.
ஆனால் இதை நளினி சிதம்பரம் ஏற்க மறுத்துவிட்டார். இந்திய கிரிமினல் நடைமுறை சட்டப்படி, பெண் ஒருவரிடம் விசாரிப்பதாக இருந்தால் அவரது வீட்டிற்கு வந்துதான் விசாரிக்க வேண்டும். அவரை அலுவலகத்துக்கு அழைத்து விசாரிக்க முடியாது என்று கூறியிருந்தார்.
இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் அமலாக்கப் பிரிவினர் ஆலோசனை நடத்தினர். அப்போது பணமோசடி தொடர்பான வழக்குகளில் பெண்களை அழைத்து விசாரிக்க தடை இல்லை என்று சட்ட வல்லுநர்கள் கூறினர்.
இதனையடுத்து நளினிசிதம்பரத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்ப அமலாக்க துறையினர் முடிவு செய்துள்ளனர்.