டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் - சமக சரத்குமார் நேரில் ஆதரவு
தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று நேரில் வந்து ஆதரவளித்தார்.
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கோரி டெல்லியில் தமிழக விவசாயிகள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சமக தலைவர் சரத்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் தெரிவித்த காலக்கெடு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வாரியம் அமைக்க வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தை ஏற்கனவே தொடங்கி நடத்தி வருகின்றனர்.

மூன்றாம் நாளான நேற்று விவசாயிகள் வாயில் துணியை கட்டி போராட்டம் நடத்தினர். தமிழக விவசாயிகளின் முக்கிய அங்கமாக விளங்குவது காவிரி மேலாண்மை வாரியம் ஆகும். ஆனால் அதை அமைக்ககோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், மத்திய அரசு காலதாமதம் செய்து வருவதாக போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பி. ஆர் பாண்டியன் கூறினார்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் வரை எங்களது உண்ணாவிரத போராட்டமானது டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக விவசாயிகள் அனைவரின் வாயில் இருந்து வரும் வேதனை வார்த்தைகளை கூட மத்திய அரசு கவனத்தில் கொள்ள மறுக்கிறது. இதனை வெளிப்படுத்தும் விதமாகத்தான் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து எங்களது வாயை துணியால் கட்டிக்கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.
இந்த நிலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் மட்டுமே காவிரி நீர் நியாயமான முறையில் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழக விவசாயிகள் டெல்லியில் முகாமிட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உச்ச நீதிமன்றம் தெரிவித்த உத்தரவின்படி வாரியம் அமைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிடுமா? என்ற எதிர்பார்ப்பு தமிழக விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications