சட்டசபையில் தூங்கிய எம்எல்ஏ... சலிக்காமல் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் !
பனாஜி: கோவா மாநில சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது சுயேச்சை எம்எல்ஏ ஒருவர் தூங்கிவிட்டார். இது தொடர்பாக முதல்வருக்கும் அந்த சுயேச்சை எம்எல்ஏ-வுக்கும் பேரவையில் இன்று கடும் வாக்குவாதம் நடந்தது.
கோவா மாநில சட்டசபைக்கு 2016-2017 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல்வரும், மாநில நிதித் துறை அமைச்சருமான லட்சுமிகாந்த் பர்சேகர் புதன்கிழமை தாக்கல் செய்தார். அப்போது சுயேச்சை எம்எல்ஏ விஜய் சர்தேசாய் தூங்கிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

இதுதொடர்பான விடியோ காட்சிகளும் வெளியாகின. இந்நிலையில், இன்று சட்டப் பேரவை தொடங்கியவுடன் இந்த விவகாரம் குறித்து முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர் அவையில் கூறுகையில், சுயேச்சை எம்எல்ஏ விஜய் சர்தேசாயை சுட்டிக்காட்டியும் அவரது நடவடிக்கையை விமர்சித்து கருத்து தெரிவித்தார்.
"பட்ஜெட் தாக்கல் செய்து முடிக்கும் வரை உங்களால் (விஜய் சர்தேசாய்) நின்று கொண்டே இருக்க முடியாது என்பது எனக்குத் தெரிகிறது; ஆனால், இருக்கையில் அமர்ந்தால் நீங்கள் தூங்கிவிடுகிறீர்களே' என்றும் அவர் கூறினார்.
அதற்கு பதிலளித்த விஜய் சர்தேசாய், "கோவா அரசு தாக்கல் செய்த பட்ஜெட் சலிப்பை ஏற்படுத்தியது; இதுபோன்ற பட்ஜெட் உரையை வாசிக்கும்போது தூக்கம் வந்தால், அது எனது தவறல்ல' என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய லட்சுமிகாந்த் பர்சேகர், "மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அது; மாறாக, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களை மகிழ்விப்பதற்காக தாக்கல் செய்யவில்லை' என்றார்.
கோவா முதல்வருக்கும், சுயேச்சை எம்எல்ஏ-வுக்கும் இடையே கருத்து மோதல் மூண்டதால் சட்டபேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications