அடுத்தடுத்து புகார்கள்.. சரண்டர் நிலைக்கு தள்ளப்படும் சசிகலா புஷ்பா!
டெல்லி: தம் மீதான அடுத்தடுத்த புகார்களைத் தொடர்ந்து வேறுவழியின்றி அதிமுக தலைமையிடம் சரணாகதி அடைவது என அக்கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட எம்.பி. சசிகலா புஷ்பா முடிவு செய்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் ஜெயலலிதா தம்மை அடித்ததாக ராஜ்யசபாவில் கூறி களேபரத்தை உருவாக்கினார் சசிகலா புஷ்பா எம்.பி. இதனால் அவர் அதிமுகவில் இருந்து உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
அப்போது நான் எம்பி பதவியை ராஜினாமா செய்யவே மாட்டேன் என திட்டவட்டமாக கூறியிருந்தார் சசிகலா புஷ்பா. இதன் பின்னர் சசிகலா புஷ்பா மீது ஏராளமான புகார்கள் அடுத்தடுத்து எழுந்தன.
இதில் அவரது வீட்டில் வேலைபார்த்த பெண்கள் ஏடாகூட புகார்களைக் கூற ரொம்பவே அதிர்ந்து போனராம் சசிகலா புஷ்பா. அத்துடன் இதுநாள் அவருடன் இருந்த எவருமே இப்போது இல்லையாம்... அவருக்கு ஆதரவுக் கரம் தரவும் யாரும் முன்வரவில்லையாம்....
ஜெயலலிதாவை எதிர்த்த போது பாராட்டிய மாற்று கட்சியினர் கூட இப்போது கண்டுகொள்ளாமல் ஒதுங்கிப் போன தனித்துவிடப்பட்டவராகிவிட்டாராம் சசிகலா புஷ்பா. இதனால் வேறுவழியின்றி ராஜினாமா செய்துவிட்டு எங்காவது போய்விடலாம் எதற்கு வம்பு என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் அவர்.
ஆனால் போயஸ் கார்டனுக்கான அத்தனை கதவுகளும் கைவிரித்து கொண்டே இருக்கின்றனவாம்.. தம் மீது மிகக் கடுமையான கோபத்தில் இருக்கும் அதிமுக மேலிடத்துடன் எப்படி சமரசமாவது? யாரை வைத்து மூவ் செய்வது? என்ற வழியை தேடுவதில்தான் படுமும்முரமாக இருக்கிறாராம் சசிகலா புஷ்பா.