சசிகலாவா இல்லை சசிகலா புஷ்பாவா?.. கன்பியூஸ் ஆகிப் போன வட இந்திய ஊடகங்கள்!
டெல்லி: அதிமுகவில் சசிகலா என்றாலே அது ஒருவர்தான் என்றாகி விட்டது. அதனால்தான் திருச்சி சிவாவை அடித்து ஜெயலலிதா கையினால் அடி வாங்கியதாக கூறப்பட்ட சசிகலா புஷ்பா யார் என்பதில் வட இந்திய (இந்தி + ஆங்கிலம்) ஊடகங்களுக்கு குழப்பம் ஏற்பட்டு விட்டது.
சனிக்கிழமையன்று பிற்பகல் 2 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் இருந்த பயணிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. திமுக எம்.பி திருச்சி சிவாவை சசிகலா புஷ்பா எம்.பி பளாரென்று அறைந்தார். அப்போதே அது பரபரப்பு செய்தியானது. உடனே வட இந்திய ஊடகங்களில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, எம்.பி திருச்சி சிவாவை அறைந்து விட்டதாக செய்தி வெளியானது.

ராஜ்யசபாவில் இன்று காலையில் பேசிய சசிகலா புஷ்பா, ஜெயலலிதா தன்னை அறைந்து விட்டதாக குற்றம் சாட்டினார். சிவாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் அவர் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில், இருந்து நீக்கப்பட்டார். இதற்கான உத்தரவை கட்சியின் பொதுச் செயலாரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று பிறப்பித்தார்.
இதையடுத்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சசிகலா புஷ்பா, ''கட்சியில் இருந்து நான் நீக்கப்பட்டு இருக்கிறேன் என்ற செய்தி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இனிமேல் நான் தன்னிச்சையாக செயல்படலாம். ராஜினாமா செய்ய முடியாது. ராஜினாமா செய்ய என்னை வறுபுறுத்தவும் முடியாது என்று கூறினார்.

எம்.பி பதவியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு கடந்த இரண்டு மாதங்களாக எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது என்றும் தெரிவித்தார் சசிகலா புஷ்பா. இன்றைய தினம் சசிகலா புஷ்பா என்ற பெயர் டிரெண்ட் ஆனது. இந்த நிலையில் சசிகலா புஷ்பா பற்றிய செய்தி போட்ட ஆங்கில இணையதளம் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் படத்தை போட்டிருந்தது.
கடந்த லோக்சபா தேர்தலின் போது சிதம்பரம் லோக்சபா தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்ட உடன் ப. சிதம்பரம் படத்தை போட்டு புண்ணியம் தேடிக்கொண்டன வட இந்திய ஊடகங்கள். அதேபோல இப்போது சசிகலாவிற்கும் சசிகலா புஷ்பாவிற்கும் குழப்பம் வந்து விட்டது போல.
டெல்லியைத் தாண்டி வட இந்திய ஊடகங்களுக்கு இன்னும் தெளிவு வரவில்லை என்பதையே இது காட்டுகிறது.












Click it and Unblock the Notifications