அதிமுகவின் அடுத்த தலைவி நான்தான்!... இது "அம்மா"வே எடுத்த முடிவு!! ... சசிகலா புஷ்பா பகீர்
அதிமுகவின் அடுத்த தலைவி நான்தான் என்று சசிகலா புஷ்பா எம்.பி தெரிவித்துள்ளார்.
டெல்லி: அதிமுகவின் அடுத்த தலைவி நான்தான் என்றும் இதை ஏற்கெனவே ஜெயலலிதா முடிவு செய்து வைத்திருந்தார் என்றும் எம்.பி. சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.
டெல்லி விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னைக்கு வருவதற்காக திருச்சி சிவாவும் சசிகலா புஷ்பாவும் காத்திருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சிவாவின் கன்னத்தில் சசிகலா புஷ்பா அடித்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து தகவலறிந்த ஜெயலலிதா, சசிகலா புஷ்பாவை போயஸ் கார்டனுக்கு வரவழைத்து எம்பி பதவியை ராஜினாமா செய்யுமாறு கூறினார். அப்போது ஜெயலலிதா சசிகலா புஷ்பாவை அடித்ததாகவும் கூறப்பட்டது. ஜெயலலிதா
தமது பதவியை ராஜினாமா செய்ய கோருவதாகவும் தமக்கு பாதுகாப்பு தேவை என்றும் நாடாளுமன்றத்தில் அழுதுகொண்டே புகார் தெரிவித்து சர்ச்சையை கிளப்பியவர் சசிகலா புஷ்பா.

தமிழகத்துக்கு வருகை
இதுகுறித்து சன் நியூஸ் சேனலில் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் சசிகலா புஷ்பா கூறுகையில் தூத்துக்குடியில் கோரம்பள்ளம் என்ற கிராமத்தை தத்து எடுத்துள்ளேன். அதனால் 15 நாட்களுக்கு ஒரு முறை தமிழகத்துக்கு சென்று கொண்டுதான் இருக்கிறேன். குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்டவற்றை செய்து கொடுக்கிறேன். அதிமுகவை வழிநடத்துவேன் என்று கூறிய ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் எதையும் சாதிக்கவில்லை.

மக்களும், தொண்டர்களும் கோமாளிகள்
சசிகலாவை எடப்பாடி பழனிச்சாமி ஒதுக்கி வைக்கவில்லை. அவருடன் தொடர்பில்தான் இருக்கிறார். பல தலைவர்கள் உள்ள ஆட்சி தற்போது நடக்கிறது. கட்சியாக இருந்தாலும் அதில் அப்படிதான் உள்ளது.
இதனால் மக்களும் தொண்டர்களும்தான் கோமாளிகளாக்கப்பட்டுள்ளார்கள். தலைவர்கள் என்று மக்களும் தொண்டர்களும் நினைத்துக் கொண்டிருக்கும் இவர்கள் சசிகலாவுடன் தொடர்பு வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்கின்றனர்
தமிழகத்தில் மக்களுக்குரிய நல்லாட்சி நடந்து கொண்டிருக்கிறதா?. ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தை நடத்தியதற்கு வழக்குப் பதிவு செய்வதா?. முதல்வர் என்ற முறையில் எடப்பாடி ஏன் சென்று பார்க்கவில்லை.

அடுத்த தலைவியாக ஜெ. அறிவிக்க இருந்தார்
அதிமுகவை வழிநடத்த என்னால் மட்டுமே முடியும். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தீர்வு கிடைத்ததா? இதே ஜெயலலிதா இருந்தால் நீட் தேர்வுக்கு அனுமதி கொடுத்திருப்பாரா? அதுபோல் நான் வந்தால் நீட் தேர்வை விடமாட்டேன். என்னை அதிமுகவின் அடுத்த தலைவியாக ஜெயலலிதா அறிவிக்க இருந்ததை அறிந்த சசிகலா குடும்பத்தினர் என்னை பழிவாங்க நினைத்தனர். என்னை பற்றி இல்லாததையும் பொல்லாததையும் ஜெயலலிதாவிடம் சசிகலா குடும்பத்தினர் போட்டுக் கொடுத்தனர் என்றார் சசிகலா புஷ்பா.












Click it and Unblock the Notifications