மதுரை குடும்ப நல நீதிமன்ற தடையை மீறி ராமசாமியை மறுமணம் செய்த சசிகலா புஷ்பா
நீதிமன்ற தடையை மீறி சசிகலா புஷ்பா எம்.பி. வழக்கறிஞர் ராமசாமியின் திருமணம் டெல்லியில் நடைபெற்றது
Recommended Video
டெல்லி: மதுரை குடும்ப நல நீதிமன்றத்தின் தடையை மீறி ராமசாமியை மறுமணம் செய்துள்ளார் ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா.
வழக்கறிஞர் ராமசாமி என்பவரை 26ஆம் தேதி சசிகலா புஷ்பா மறுமணம் செய்யப்போவதாக சமூகவலைத்தளங்களில் அழைப்பிதழ் பரவியது. இது தொடர்பாக சசிகலா புஷ்பா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
ராமசாமியின் மனைவி சத்யபிரியா இது தொடர்பாக மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் சசிகலாவின் திருமணத்திற்கு தடை விதித்து தீர்ப்பளித்தது எனினும் திட்டமிட்டபடி சசிகலா புஷ்பா ராமசாமியின் திருமணம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
சசிகலா புஷ்பா சர்ச்சைகள்
அதிமுகவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் சசிகலா புஷ்பா. திமுக எம்.பி சிவாவை டெல்லி விமான நிலையத்தில் அடித்தார். ஜெயலலிதாவால் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என ராஜ்யசபாவில் கண்ணீர் மல்க கூறினார்.
சசிகலா புஷ்பா கணவர்
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்து அவரது முதல் கணவர் லிங்கேஸ்வரன் திலகன் வேட்பு மனுத்தாக்கல் செய்ய அதிமுக தலைமை அலுவலகம் வந்த போது அதிமுக தொண்டர்களால் கடுமையாக தாக்கப்பட்டது வரை தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்தார் சசிகலா புஷ்பா.
சசிகலா புஷ்பா மறுமணம்
தனக்காக அடிவாங்கி ரத்தக்களறியான முதல் கணவர் லிங்கேஸ்வர திலகனை விவாகரத்து செய்தார் சசிகலா புஷ்பா, ராமசாமி என்பவரை இரண்டாவது திருமணம் செய்யப் போகிறார் என்ற தகவல்கள் வெளியாகின. இருவரின் பெயர் போட்ட திருமண பத்திரிகை புகைப்படமும் வெளியானது.
சட்ட ஆலோசகர் ராமசாமி
ராமசாமி வழக்கறிஞர் எனவும் ஓரியண்டல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எனவும் செய்திகள் வெளியானது. மேலும் அவர் நாடாளுமன்றத்தின் சட்ட ஆலோசகராக உள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப நல நீதிமன்றம் தடை
இதனால் அதிர்ச்சி அடைந்த ராமசாமியின் முதல் மனைவி சத்யபிரியா இந்த திருமணத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் சசிகலா புஷ்பாவிடம் இருந்து தனது கணவரை மீட்டுத் தர வேண்டும் எனவும் மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சசிகலா புஷ்பாவை திருமணம் செய்ய ராமசாமிக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
சசிகலா புஷ்பா மறுமணம்
சசிகலா புஷ்பா - ராமசாமி திருமணம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் நீதிமன்ற தடையை மீறி இன்று திருமணம் நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
பாரம்பரிய முறைப்படி மறுமணம்
சசிகலா புஷ்பா ராமசாமி திருமணம் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் பாரம்பரிய முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது. ராமசாமியின் கரம் பற்றி மூன்று முறை மணமேடையை வலம் வந்தார் சசிகலா புஷ்பா. நீதிமன்றம் தடை விதித்த நிலையிலும் திட்டமிட்டபடி ராமசாமியின் கரம் பிடித்துள்ளார் சசிகலா புஷ்பா.