ஏடிஎம்மில் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ25 கட்டணம்- எஸ்பிஐ அடாவடி அறிவிப்பு
ஏடிஎம்மில் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ25 கட்டணம் வசூலிப்போம் என்ற அடாவடி அறிவிப்பை எஸ்பிஐ வெளியிட்டுள்ளது.
மும்பை: ஏடிஎம்மில் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் ரூ25 கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து நாடு முழுவதும் ஏடிஎம்களில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்றனர்.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்ட நவம்பர் முதல் வெளியாகும் ஒவ்வொரு அறிவிப்புகளும் பொதுமக்களை பீதியில் உறைய வைத்துக் கொண்டிருக்கிறது. இதன் உச்சமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வங்கிக் கணக்கில் கட்டாயம் ரூ5,000 வரை பேலன்ஸ் இருக்க வேண்டும் என அறிவித்தது.
மூடப்பட்ட ஏடிஎம்கள்
இன்னமும் கூட மாத தொடக்கங்களில் ஏடிஎம்களில் பொதுமக்கள் அல்லாடும் நிலைமைதான் இருக்கிறது. பல ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டுவிட்டதால் மக்களின் அவதி தொடர் கதையாகி வருகிறது.
அதிர்ச்சி அறிவிப்புகள்
இந்நிலையில் ஜூன் 1-ந் தேதி முதல் ஏடிஎம்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் ரூ25 கட்டணம் வசூலிக்கப்படும் என அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா. அத்துடன் ரூ5,000க்கு மேல் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றினாலும் கட்டணம் வசூலிப்போம் என்று கூறியுள்ளது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா.
நீண்ட கியூ வரிசை
இந்த அறிவிப்புகள் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் ஸ்டேட்ப் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம்களில் நீண்ட கியூ வரிசையில் மக்கள் இன்றே நிற்க தொடங்கினர்.
வாபஸ்
இதனிடையே இந்த சுற்றறிக்கையை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா திரும்பப் பெறுவதாக அறிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் உறுதியான தகவல் வெளியாகாததால் குழப்பம் நீடித்து வருகிறது.